வில்வம்

மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2
கனவில் சொன்ன வில்வ விபூதி வைத்தியம் - 35

வைத்தியநாதன் என்பவர் மகா பெரியவாளின் பக்தர். அவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறார்.

அவரது மனைவிக்கு நெடுநாட்களாகவே உடல்நிலை சரியாக இல்லை. சாப்பிட்டதெல்லாம் வாந்தியாக வெளி வந்தது. ஹார்லிக்ஸ் சாப்பிட்டு, அதுவும் வாந்தியாக வெளிவந்தபோது,வைத்தியநாதன் மயக்கமடைந்த தனது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

இரவு முழுவதும் கண்காணிப்பில் வைத்துக் கொண்ட டாக்டர் விடிந்தவுடன், “அம்மாவுக்கு உடலில் எந்தவிதமான கோளாறும் தெரியவில்லை….அந்த டெஸ்ட்,இந்த டெஸ்ட்டுன்னு தொந்தரவு கொடுப்பா….அதனாலே இப்போதே டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு ஆத்துக்குப் போயிடுங்கோ” என்று சொல்லிவிட்டு அந்த கருணையான டாக்டர் போய்விட்டார்.

டாக்டர் சென்றபின் பத்மா,தன் கணவர் வைத்தியநாதனிடம் அந்த அதிசயத்தைச் சொன்னார்.

நான் முதல் நாள் நினைவிழந்ததும் மகா பெரியவா தனக்குக் காட்சி கொடுத்ததாகவும்,

“உனக்கு எல்லாம் சரியாகிவிடும்…நாளையிலிருந்து காலையில் பல் தேய்த்தவுடன் ஒரு வில்வத்திலே கொஞ்சம் விபூதி வைச்சு முதலில் சாப்பிடு.45 நாளில் எல்லாம் சரியாகிவிடும்” என்று அருள் பாலித்ததாகவும் பத்மா சொன்னார்.

மகான் சர்வ வல்லமை படைத்த வைத்தியர் ஆயிற்றே, மறுநாளில் இருந்தே வில்வ வைத்தியத்தை ஆரம்பித்தார் பத்மா. 45 நாட்களுக்கு இன்னும் இரு தினங்களே மீதியிருந்தன.ஞாபகமறதியோ, அஜாக்கிரதையோ வில்வம் பறித்துச் சாப்பிடாமலேயே காப்பி சாப்பிட்டுவிட்டார்.

45 ம் நாள் வைத்தியநாதன்,தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த சமயம் அவரது மனைவி பத்மா, வயிற்றுக் குமட்டல் என்று வாந்தி எடுக்க அது ரத்தமாக இருந்தது கண்டு,கணவர் ஆடிப்போய் ஆஸ்பத்திரிக்கு மனைவியுடன் விரைந்தார்.

போகும்போதே மனதிற்குள் மகானிடம் முறையிட்டுக் கொண்டே போனார்.

“மகாபிரபோ,தங்களது கட்டளைப்படி செய்து வந்த வைத்திய முறையில் இரண்டே நாள் தடைபட்டது உண்மைதான்.ஆனால் அது என் நம்பிக்கையுன்மையாலோ அசிரத்தையாலோ ஏற்படவில்லை என்பது உன் திரு உள்ளம் அறியும்.தங்களின் அருளுக்காகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.”

டி.பி.யாக இருக்குமோ என்று வைத்தியநாதன் சந்தேகப்பட்டார்.

“உங்கள் மனைவிக்கு வெறும் பலஹீனம் மட்டும்தான். டி.பி.எல்லாம் இல்லை. வீட்டுக்குப் போங்கள்” என்று பரிசோதித்த டாக்டர் சொல்லிவிட்டார்.

மனைவியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு,கணவர் தன் காரியாலயத்திற்குக் கிளம்பினார்.

மகானிடம் காலையில் முறையிட்டதை அவர் மறந்தே போய்விட்டார். ஆனால் என்ன நடந்தது?

அவரது மனைவி புதிய தெம்புடன் அவரை வரவேற்றது மட்டுமில்லாமல் ஒரு அதிசயமான செய்தியையும் சொன்னாள்.

“மத்தியானம் பக்கத்து வீட்டு மாமி இங்கே வந்தாள். நேற்று சென்னையில் அவரது பிள்ளையின் கல்யாணம் நடந்ததாம். நடந்தவுடன் பிள்ளையை இளையாத்தங்குடியில் முகாமிட்டிருக்கும் மகா பெரியவாளைத் தரிசிக்க போனாளாம். தரிசனம் முடிந்தவுடன் அந்த மாமி மகானிடம் சொன்ன விஷயம் இது…..

“நான் டெல்லியிலிருந்து வரேன். எங்காத்துக்குப் பக்கத்திலே பத்மான்னு என் சிநேகிதி ஒருத்தி இருக்கா.. அவளுக்கு உடம்புக்கு ஒன்று போனா ஒண்ணு வந்துட்டே இருக்கு.பெரியவா அனுக்கிரகம் பண்ணி அவளுக்கு பிரசாதம் கொடுக்கணுமின்னு வேண்டியிருக்கா.

“உன் பிரண்டா? பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி எடுக்கிறாளாக்கும்…உம்..எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்ன மகான், ஒரு இலையில் சுற்றி பிரசாதம் கொடுத்ததாகவும், அதைப் பிரிக்காமல் அப்படியே அந்த மாமி என்னண்டே கொண்டு வந்து கொடுத்தா.

“அதில் பெரியவா என்ன பிரசாதம் கொடுத்திருப்பார்ன்னு உங்களால் சொல்ல முடியுமா?” என்று வைத்தியநாதனின் மனைவி அவரிடம் ஆனந்தம் பொங்க கேட்டார்.அவரால் ‘சட்’டென்று யூகிக்கவே முடியவில்லை.

அந்த மகான் பிரசாதமாக அனுப்பியிருந்தது, விபூதியா,குங்குமமா,கல்கண்டா,திராட்சையா? இதில் ஏதும் இல்லை.

தான் பத்மாவின் கனவில் தோன்றி அருளினாலும் அது நிஜமே என்று மெய்ப்பிப்பது போல்,பிரசாதமாக இரண்டு வில்வ இலைகளை,இலையில் மடித்துக் கொடுத்து அனுப்பி இருந்தார்.அதாவது வில்வம் சாப்பிடாத, அந்த இரண்டு நாட்களுக்கான வில்வ இலைகள் இரண்டு.

பத்மா அதற்குப் பின் எந்தவிதமான உபாதையின்றி வழக்கமான உணவை உட்கொண்டார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Jul-16, 7:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே