​ அகம் தேடும் முகம்

பூமியில்தான் எத்தனை முகங்கள்
--பூவுலகில் காணும் பலரகங்கள் !
அறிந்தவை நமக்கு சிலவென்றால்
--அடையாளம் தெரியாதது பலவும் !

​பிறந்தபின் முதலில் விழிப்போம்
--தாதியின் கையில் தவிப்போம் !
தாயின் முகத்தைத் தேடுவோம்
--தந்தையை அறியத் துடிப்போம் !

முன்னோரின் முகவரியை அறிவோம்
-- மூத்தோர் சொல்லிடக் கேட்போம் !
தேடலும் வாழ்வில் தொடர்ந்திடும்
--தேய்ந்து ஓய்ந்து தேகமும்சாய்ந்திடும் !

அன்புக்கும் ஆதரவுக்கும் வாடுவோம்
--அரவணைக்கும் மனதைத் தேடுவோம் !
இன்பம்தரும் இதயத்தை நாடுவோம்
--இரவுபகல் மகிழ்ச்சியால் பாடுவோம் !

படிப்பறிவை வளர்த்தாலும் வாழ்வினில்
--பகுத்தறிவுடன் பயணித்தால் பாரினில்
உற்சாகத்தின் உச்சியை அடையலாம்
--உள்ளவரை ஊர்போற்ற வாழலாம் !

ஆணவம் அதிகமுள்ள அகங்கள்தான்
-- அலைந்துத் திரியும் மிருகங்களே !
அகங்களைத் தேடிடும் முகங்கள்தான்
--அகிலத்தில் வாழும் மகிழ்வோடுதான் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Aug-16, 8:24 am)
பார்வை : 971

மேலே