விதவைத் திருமணம்
நேற்றுவரை பூவும் பொட்டோடும்
அவன் கட்டிய தாலி கழுத்தை அலங்கரிக்க
சுமங்கலியாய் இனிதாய் வாழ்ந்து வந்தாள்
காலம் செய்த கோலத்தினால்
பொல்லா விதி செய்த கொடுமையினால்
அவன் இவ்வுலகை நீத்து போய் சேர்ந்தான்
வந்த இடத்துக்கே
இங்கோ அவள் பூவும் இழந்தால்
பொட்டும் இழந்தால் தாலியும் நீக்கப்பட்டாள்
விதவை என்ற பட்டமும் சூட்டப்பட்டாள்
மங்கள சடங்குகளுக்கு தடை செய்யப்பட்டாள்
விதவையின் நோக்கு பொல்லாங்கு என்றனர்
நேற்று அவளை சுமங்கலி என்று உபசரித்தவர் எல்லாம்
அவள் அர்த்தமற்ற சமூக கொள்கைகள் மற்றும்
கலாச்சார பழக்கங்களை எதிர்த்து போராடும் வீராங்கனை
அவள் இன்றும் பூ வைத்து பொட்டும் வைத்து
பட்டாடை அணிந்து பவனி வருகிறாள்
தன் காலில் நிற்கிறாள் தனித்து வாழ்கிறாள்
அவன் அன்று கட்டிய தாலியை அன்று கழற்றினாள்
அது வெறும் சடங்கிற்கே ; இன்று மீண்டும் அது
அவள் கழுத்தை அலங்கரிக்கிறது
அதற்கு அவள் சொல்கிறாள்,
" அதுதான் அவனை என்னுள் காணவைக்கின்றது "
" ஆயின் நான் ஏன் விதவை? எப்போது விதவை ?
என்னை என்னைப்போன்ற வெகுளி பெண்களை
இரக்கமில்லாமல் புறக்கணிக்கும் இந்த சமுதாயம்,
அதுதான் விதவை; ஆம் பண்பெல்லாம் இழந்த
சமூக விதவை " என்றாள்.
" நான் நாந்தான், விதவைக்கு கோலம் நாடேன்;
அவன் என்னுள் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது
நான் என்றும், என்றென்றும் சுமங்கலியே ;
என் போன்ற மங்கையரும் அவ்வாறே ' என்றாள்.
சமூகமே! வீணே பெண்ணை வதைக்காதே
நல் வழியில் செல்லும் மாந்தரை, மகளிரை
நலமாய் இருக்க வாழவிடு
மறைந்து போய் விடு விதவை என்ற சொல்லை
அது ஒரு பொல்லாங்கு சொல் .
அவள் மறுமணம் செய்து கொண்ட விதவை
ஆம் மறைந்த கணவனை மனதில் பதித்து
அவன் நினைவில் வாழ்கிறாள்; அவன் கட்டிய
தாலியே அதற்க்கு சாட்சியாய் நிற்க,
இது ஓர் அதிசய விதவை மறுமணம்
காலம் இதை ஏற்குமா யாரறிவார் ?