மழலைக்கு வாழ்த்து

மயக்கிடும் மனதை மழலைகள்
வருடிடும் நெஞ்சைக் கிள்ளைகள்
சிரிப்பில் சிந்தையும் குளிர்ந்திடும்
நினைப்பில் என்றும் நிலைத்திடும் !

அழகிய மகனிவன் அப்துல்க்கு
முல்லை மலரிவன் அன்னைக்கு !
புன்னகை சிந்திடும் கண்ணனே
புகழுடன் வாழ்ந்திடு மன்னனே !

நறுமண நந்தவனத்தின் நாயகனே
நாளைய உலகத்தின் நம்பிக்கையே !
தவழ்ந்திடும் மழலையே நீ இளவரசன்
மகிழ்ந்திடும் பெற்றோர்க்கு நீ பேரரசன் !

விழிகளில் தெரிகிறது வருங்காலம்
விடியலாய் விரிகிறது பொற்காலம் !
தந்தையைப் போலவே நீயும் கற்றிடு
தவறாது பந்தயத்தில் நீயும் வென்றிடு !

வரவேற்று வாழ்த்துகிறேன் உளமார
வாழ்ந்திட வேண்டும் நீ வரலாறாய் !
நலனுடன் நானிலத்தில் வாழ்ந்திடுக
வளமுடன் வையகத்தில் வாழ்ந்திடுக !

நற்பெயருடன் மதிப்பாய் வாழ்ந்திடுக
நல்லிதயங்கள் வாழ்த்திட வாழ்ந்திடுக !
அறிவோடு ஆற்றலுடன் நீ வாழ்ந்திடுக
அளவிலா ஆனந்தமுடன் நீ வாழ்ந்திடுக !

குறையிலா நிறைமனதுடன் வாழ்ந்திடுக
குணங்களில் ஒளிவிளக்காய் வாழ்ந்திடுக !
பார்புகழ்ந்திட பல்லாண்டு வாழ்ந்திடுக
உள்ளன்போடு வாழ்த்துகிறேன் வாழியவே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Oct-16, 7:38 am)
பார்வை : 991

மேலே