தமிழர் பண்பாடு

சங்க காலத் தமிழரின் பண்பாடு
கட்டுரை:
குறிப்புச் சட்டம்

முன்னுரை

1. சங்கத் தமிழ் அறிமுகம்
2. தமிழரின் ஈகைத்திறம்
3. விருந்தோம்பும் பண்பு
4. புலமை
5. வீரம்
6. நன்றி மறவாத் தன்மை
7. தெய்வ நம்பிக்கையும், பிற நம்பிக்கைகளும்.
9. காதல்
10 பழக்க வழக்கங்கள்
11 அறிய உதவும் சான்றுகள்
12 முடிவுரை:


“இருந்தமிழே உன்னால் இருந்தேனே
விண்ணோர் விருந்தமிழ்தம் பெரினும் வேண்டேன்” – என்றார் ஒரு புலவர் பெருந்தகை. அத்தகைய தமிழ் மொழியினில் சங்க கால மக்கள் பற்றிய செய்திகளை எடுத்தியம்ப வாய்ப்பளித்த நல்ல இதயங்களுக்கு நன்றியை சமர்ப்பித்து இக்கட்டுரையினை என் அன்புப் பெற்றோர்களின் பொற்பாதங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

முன்னுரை:

அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாலையும், தேனையும் விநாயகப் பெருமானுக்கு நால்குவதாய்க் கூறி. சங்கத் தமிழினை இறைஞ்சி வேண்டிவிட்டார். அத்தகைய சிறப்பும் உயர்வும் அதில் இருப்பதால் தானே அவர் அவ்வாறு வேண்டியுள்ளார். அத்தகைய உயர்வான சங்கத்தமிழில் பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகையிலும் சுட்டப்படும் சங்கத் தமிழரின் மாண்புகள் சிலவற்றினை உங்களுடன் பகிர்கிறேன்.

1. சங்கத் தமிழ் அறிமுகம்
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் ஆகிய பதினெண் மேற்கணக்கு நூல்களும் சங்க இலக்கிய நூல்கள் எனப் போற்றப்பட்டு வருகின்றன.
சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரும் சங்கம் வைத்துத் தமிழ் மொழியினை வளர்த்தனர்.
இச் சங்கம் முதல், இடை. கடை என மூவகைப்படும்.
சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் உள்ள பாட்டுக்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரை என்று கூறுவர்.

நாட்டின் மூலை முடுக்குகளிலும் நகரங்களிலும் வாழ்ந்த புலவர்கள் பல வகைப் பாடல்களை இயற்றியிருந்தனர். அவை பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தமையால் காலப் போக்கில் பல அழிந்து போயின. இவை நமக்குக் கிடைக்கக் காரணமாய் இருந்தவர் தமிழ் தாத்தா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சுவாமிநாதய்யர் அவர்கள். இவரைப் போன்ற பல அரிய பெருந்தகையாளரின் தளரா முயற்சியின் விளைவே இன்று நம் கையில் சங்கத் தமிழ் வலம் வந்து பொங்கிப் பொலிவுடன் மிளிர்கின்றது. இத்தகைய கிடைத்தற்கு அரிய பொக்கிஷத்தினைப் பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையா கடமைகளுள் ஒன்றாகும்.

சங்கம் பெயர்க் காரணம் மற்றும் சங்கங்கள்:
‘சங்கம் என்பது அறிஞர், அறவோர் பலர் கூடி அமைக்கும் அமைப்பாகும்.’ பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. மதுரை, கபாடபுரத்தில் முதல் இரண்டு சங்கங்களும் தோன்றி மறைந்தபின், பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது என்றும் கருதப்பட்டது. அத்தகய மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்களே எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்.

மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்ப் புலவர்களை ஊக்கமூட்டி, ஆதரவு நல்கி, அவர்களின் திறன் வளர பெரிதும் உறுதுணை புரிந்தனர். அதனால் செந்தமிழ்ப் புலவர்களும் மன்னர்களையும், வள்ளல்களையும், அவர்களின் நாடுகளையும், ஊர்களையும் முறையே போற்றிப் புகழ்ந்துப் பாடியதும் புலனாகின்றது.

2. சங்கத் தமிழரின் ஈகைத் திறம்:
“ஈதல் இசைப்பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிற்கு”
என்ற பொய்யாமொழியின் பொன்மொழிக்கிணங்க சங்கத்தமிழர் ஈகையில் தழைத்தோங்கி விளங்கினர். இதற்கு முதற்கண் கடையெழு வள்ளல்களை சான்றாகக் கூறலாம்.
 நறுமணம் நல்கும் நறுமுல்லைக் கொடி, காற்றல் துவண்டு படர இயலாமல் வருந்துவதாய் எண்ணித் தன் உயரிய தேரினையே அக்கொடி படர நல்கினான் பாரிவள்ளல்.
 கார்மேகம் கண்ட கலாப மயில் தன் அழகிய தோகையினை விரித்தாடுதலைக் கண்டான் பேகன். கடுங்குளிரதனிலே கலாப மயில் நடுக்குற்று நலிகிறதோவென எண்ணி மனம் கசிந்தான். உடனே தன் பொன்னாடையை பாங்காய் அதன் மேல் போர்த்தியே மனம் நெகிழ்வுற்றான்.
 கிடைத்தற்கரிய தீஞ்சுவை நெல்லிக்கனியினை தாம் சுவைத்து வாழ்தல் நன்றன்று என்றெண்ணி தன்னைக்காட்டிலும் தமிழ் வாழவேண்டும் என்ற பெருந்தகைமை உள்ளத்துடன் இன் தமிழ்ப் புலமை பெற்ற தமிழ் மூதாட்டிக்கு அதனை ஈந்து சிறப்பு செய்வித்தான் அதியமான்.
 “இடுக்கண் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்” என்பதற்கிணங்க, துன்பத்தில் உழன்று வாடி வருந்தும் கலைஞர் தம்மை தன் இனிய சொற்களால் தேற்றுவித்தும். அவர்கள் வறுமையினைப் போக்க தன்னிடம் உள்ள உயர்ஜாதிக் குதிரைகளையும் மற்றும் பொருள்களையும் நல்கி சிறப்பித்தவனே வள்ளல் காரி என்பவன்.
 ஒளிர்மிக்கதாய் சுடருடன் பிரகாசிக்கும் கிடைத்தற்கரிய நீலமணியினையும். அதைப் போன்றே நாகதேவதையின் அருளால் தனக்குக் கிடைக்கப் பெற்ற கலிங்கம் என்ற ஆடையினையும் கூட தன்னிடம் யாசித்து வந்த இரவலர்களுக்கு இன்முகத்துடன் நல்கி அவர்தம் முகம் மற்றும் அகமலர்ச்சியினைக் கண்டு களித்தவன் அண்டிரை ஆய் என்ற வள்ளல்.
 “விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி” என்ற பொன்மொழிக்கேற்ப. பருவம் பொய்த்தல் போன்ற காலங்களில் மக்கள் பசிப்பிணியகற்றும் மாமருந்தாய்த் திகழ்ந்தவன் நள்ளி என்ற வள்ளல் பெருந்தகை. அவாறு இரவலராய் வந்தோரின் பசிப்பிணயைப் போக்க எண்ணற்ற திரவியங்களை வழங்கி அதில் அவர்களின் மன நிறைவினைக் கண்டு பேரானந்தம் எய்தியவன் அவன்.
 அம்பலத்து இறைவன் போல் தன் திறமையினால் கூத்தாடி மக்களை மகிழ்வித்து வந்த கூத்தர்களுக்கு வளமான நாடுகள் பலவற்றினை நல்கி மகிழ்ந்தவன் கொல்லியாண்ட வல்வில் ஓரி என்ற மன்னன்.

இவர்களேயன்றி, ஒய்மாநாட்டை ஆண்ட நல்லியக் கோடன் என்ற மன்னனோ மேற்சொன்ன எழுவரும் ஆற்றிய கொடையாகிய பாரத்தினை, உலகே அறியும் வண்ணம் தான் ஒருவனாகவே தாங்கிய மனவலிமையும். தளரா முயற்சியும் கொண்டு ஆற்றியவன்.

அவன் பரிசு வேண்டி வந்தோரின் சிறப்பிற்கிணங்க பரிசளிக்கும் வன்மையுடையோன். தகுதியற்றோரும் மனக் கோணாவண்ணம் வாரிவழங்கும் இயல்பினன்.

அவன் தன்னை நாடி வரும் இரவலர்களுக்கு முதற்கண் மெல்லிய ஆடையினை நல்கியும், மயக்கம் தரும் கள்ளினைப் பருகத் தந்தும், வீமன் எழுதிய சமையல் நூல் குறிப்பில் உள்ளவாறு சிறிதும் மாறாமல் அறுசுவை அடிசில் தயாரித்து, அதனைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி விருப்பமுடன் தானே அவர்கள் அருகிருந்து அமுதும் செய்விப்பவன்.
அதோடன்றி, தன் படைத்தலைவர்கள் கொண்டுவந்த பரிசுப் பொருள்கள் அனைத்தினையும் நல்குவதோடு, சாதிலிங்கம் கொண்டு நிறமூட்டப் பெற்ற அழகிய போர்வையினையும், திறமை மிக்க தச்சர்கள் தாமே ஏறிச் செலுத்தி ஆராய்ந்த புகழ்வாய்ந்த நல்ல தேரினையும், வெண்ணிற எருதுகளையும், பகனுடன் சேர்த்து யானை, குதிரை ஆகியவற்றினையும் நல்கியும் அன்றைய தினமே அவ்விரவலர்களை அனுப்பியும் வைப்பவன். போன்ற குறிப்புகளை பத்துப்பாட்டில் சுவைத்து இன்புறலாம்.

3. விருந்தோம்பல்:
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் நன்று”
என்ற பொன்மொழிக்கிணங்க, சங்க கால மக்கள் தன் உற்றார் உறவினரேயன்றி, புதிதாக தன் இல்லம் நாடி நள்ளிரவில் வருபவர்களுக்கும், ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்ற கொள்கையினைக் கொண்டு வாழ்ந்து அவர்களுக்கு அறுசுவை அடிசில் நல்கி சிறப்பு செய்வித்ததை இலக்கியத்தில் கண்டு இன்பம் துய்க்கலாம்.

இவை ஆற்றுப்படை நூல்களில் விரவி வருகின்றன. வள்ளல் பெருந்தகையராய் விளங்கிய மன்னர்களைப் பாடி பரிசில் பெற்ற புலவர் பலர் தன் எதிரே, தன்போல் பரிசில் பெற வரும் பிற புலவர்களை அம்மன்னர்களிடம் வழிநடத்தும் மாண்பின் வாயிலாக அம்மன்னர்களின் விருந்து உபசரிப்புகள் புலனாகின்றன.

பொருநராற்றுப்படையினில், முடத்தாமக் கண்ணியார், கரிகாற்பெருவளத்தானின் விருந்தோம்பும் பண்பினையும். ஈகையின் மாண்பினையும் எடுத்தியம்பும் பாங்கினை காணலாம்.

கரிகால் பெருவளத்தான், உணவு அருந்தும் சமயத்தில் வரும் இரவலர்களுக்கு, அறுகம்புல்லைத் தின்று கொழுகொழுவென்று வளர்ந்த செம்மறியாட்டின் வேகவைக்கப்பட்ட அழகிய பருமனான தொடையின் வெந்த கறியினையும், இரும்புக் கம்பியில் கோர்த்துக் கட்டப்பட்ட கொழுமையான இறைச்சியாகிய பெரிய தசைத்துண்டினையும் தின்னுங்கள் தின்னுங்கள் என்று வற்புறுத்திக் கொடுப்பான்.

அதோடு இனிமையான சுவையுடயனவும், பல வடிவங்களை உடைய தின்பண்டங்களைக் கொண்டுவந்து அவற்றினையும் தின்னுமாறு கூறி அமரச்செய்து, மேலும் விருந்தினர்களை மகிழ்விக்கும் பொருட்டு, இலக்கணம் பொருந்திய முழவின் இசையுடன் சேர்ந்த பாடலை விறலியர்கள் தாளத்திற்கேற்ப பாடிக்கொண்டே ஆடவும் படியான காட்சியைக் கண்டும், காதுக்கினிய இசையினைத் துய்த்தும் உணவு அருந்தச் செய்வான்.

மேலும் முல்லை மொட்டினைப் போல் வரிகள் இல்லாமல் முனை உடையாமல் இருந்த அரிசியைக் கொண்டு விரல் போல் நீண்டு காணப்படும் சோற்றினையும், அதற்குத் தொட்டுக் கொள்ள நன்றாகப் பொரிக்கப்பட்ட பல்வேறு காய்கறிகளையும் கழுத்துவரை உண்ணச் செய்வான். இவ்வாறு இரவும் பகலும் இறைச்சியை மென்று தின்றதன் காரணமாக அந்த இரவலர்களுடைய பற்கள் முனை முணங்கிக் காணப்பட்டன.

இவ்வாறு உண்டு களித்தபின் பன்னாள் கழித்து மெதுவாக நாங்கள் எங்கள் ஊருக்குச் செல்கிறோம் என்று இரவலர்கள் கூறக் கேட்டவுடன், எம் கூட்டத்தை விட்டு செல்கின்றீர்களா? என்று முதலில் கோபமுற்றவனாகவும், பின்னர் வருத்தம் கொண்டு இரவலர்களைப் பிரிய மனமின்றி உடுக்கைப் போன்ற பாதங்களை உடைய யானைக் கன்றுகளுடன், பெண்யானையையும், ஆண்யானையையும் நல்குவதோடு, அவர்கள் விரும்பும் அளவிற்குப் பொன்னையும் பொருளையும் வாரிக்கொடுத்தனுப்புவான்.

அடுத்து, பெரும்பாணாற்றுப்படையில், கடியலூர் உருத்திரங் கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனின் விருந்தோம்பல் காட்சியினை நல்குவதைக் காணலாம்.

மற்ற நாடுகள் பழமையான் வறுமையினால் வாட, வறுமையினைச் சிறிது கூட அறியாத தொழில் செய்வதில் சோம்பல் கொண்டிருந்த உழவர்கள், தங்கள் உழைப்பினால் வந்த வெண்மையான நெல் சோற்றை அவர்கள் வீட்டில் வளர்த்த பெடைக் கோழிக் கறிகொண்டு சமைத்த பொரியலுடன் இரவலர்களுக்கு நல்குவர்.

பட்டினத்திலோ, கள் தயாரிக்கும் பெண்கள் தாங்கள் உணவருந்திய தட்டுகளைக் கழுவி அதனால் வடிந்த தண்ணீர் குழம்பு போன்று சேறாகக் காட்சி தருகின்றது. அந்த ஊறிய சேற்றில், பல கரிய நிறமுடைய குட்டிகளை உடைய பெண்பண்றி புரள்கிறது. அப்படிப்பட்ட அதன் கறிகளையும், அதன் துணையான ஆண்பன்றியின் வளமான தசைகளையும் கறி சமைத்து அதனுடன் மகிழ்ச்சிதரும் கள்ளினையும் இரவலர்க்கு நல்குவர்.

அடுத்து தோப்பு வீடுகளில் இரவலர் செல்லும் பொழுது, அங்கு அவர்களுக்குத் தாழ்வான குழைகளை உடைய பலாக்கனியில், சக்கை இன்றி, பெரிய பழத்தை நல்குவர். பின்னர் பெண்யானையின் தந்தத்தினை ஒத்திருக்கும் குழையில் இருந்து முற்றி வளைத்த ஒளியினை உடைய வாழைக் கனியினை நல்குவர். அதன் பிறகு பனை நுங்கையும், இன்னும் பிற இனிய உணவுப் பொருள்களையும் தின்று தின்று வெறுப்புக் கொள்ளக் கூடிய நிலை வரின் முளையினைத் தன்னிடத்தில் கொண்டிருக்கும் சேப்பங் கிழங்கினை நல்குவர்.

இவ்வாறு மன்னனைக் காணும் வழியெங்கிலும் விருந்து உபசாரம் நடைபெறும்.

அடுத்து மலைப்படுகடாம் என்று அழைக்கப்படும் கூத்தராற்றுப் படை வாயிலாக நன்னன் சேய் நன்னன் மற்றும் அவன் ஊரார் ஆகியோரின் விருந்தோம்பல் நிகழ்ச்சியினை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடல் வழி நின்றுப் பயின்று இன்பம் துய்க்கலாம்.

நன்னனைக் காணவரும் இரவலர்கள் அவனைக் காணச் செல்லும் வழியினில் வசிக்கும் பாக்கத்தார், வந்திருக்கும் இரவலர்கள் நன்னனின் கூத்தர்கள் என்று அறிந்ததும் அவர்களின் சொந்தவீட்டிற்குள் நுழையும் பாணியில் உள்ளே அனுமதிப்பர். மேலும் தங்களின் உறவினர்களாகவே அவர்களைக் கருதி, அவர்களுடன் உறவு பாராட்டி, இனிமையான மொழிகளைக் கூறியபின் நெய்யில் வெந்த தசைப் பொரியலுடன் நிறமுடைய தினைச்சோற்றினை அவர்களுக்குத் தந்து உபசரிப்பர்.

மேலும் அவ்வூரில் வாழ்பவர்கள் தாங்கள் மலையேறிக் கிடைத்தப் பொருள்களுடன், மூங்கில் குழாயில் செய்ததும் நன்றாகப் பக்குவப் பட்ட தேனால் செய்த கள்ளின் தெளிவான வடிப்பையும் குறைவின்றிக் கொடுப்பர். பின்னர் நெல் கொண்டு சமைத்த கள். மற்றும் அருவியினால் அடித்துவரப்பட்ட பலாப்பழத்தின் விதை, அதனுடன் வந்த கடமானின் தசை, வேட்டையடிக் கொன்று வீழ்த்திய பன்றியின் கொழுப்பு மிகுந்த தசை, உடும்பின் கறி, புளி, பசுவின் மோர் ஆகியவற்றினைக் கலந்து மூங்கிலின் நன்றாக முற்றிய அரிசி ஆகியவற்றுடன் சுரபுன்னைக் காடே மணக்கும்படி சமைத்து உண்ணச் செய்வர்.

அதையடுத்துக் கானவர்கள் இனிய கனியை உண்ணக் கொடுப்பர்.

ஆட்டிடயர்களோ இரவலர்களைக் கண்ணவுடன் தங்களுக்கென ஏற்கனவே சமைத்திருந்த பாலையும். பால் கலந்த சோற்றினையும் தந்து உபசரிப்பர்.

ஆயர்கள், அவர்கள் இல்லத்தில் இருக்கும் மாமிச உணவினையும், கிழங்கினையும் தந்து வழிநடைக் களைப்பினைப் போக்கி உபசரிப்பர்.

அதோடு பொந்துகள் போன்று ஒவ்வொன்றின் அளவும் ஒத்துக் காணப்படும் அரிசியை வெள்ளாட்டுக் கறியுடன் சேர்த்து சமைத்த சோற்றின் நடுவில் குழி பறித்து அதனுள்ளே நெய்யிட்டு சர்க்கரையை நன்றாகக் கொழித்து எடுத்த தினைமாவுடன் நாள்தோறும் உண்ணத்தருவர்.

இதனைக் கடந்து நன்னனைக் காணச் சென்றால் அவன் நூலால் நெய்யப்பட்ட ஆடைகளை வறுமையுடன் வந்திருந்த இரவலர் இடுப்பில் உடுத்தச் செய்து அவனோடு அவர்கள் இருக்கும் காலம் வரையிலும் மாமிசத்துடன் வெண்ணெல் அரிசியும் தடையின்றிக் கொடுக்கப் பண்ணுவாடன்.

இவ்வாறாக சங்ககால விருந்தோம்பல் அறியப்படுகின்றது.

4. புலமை


சங்க இலக்கியப் பாடல்கள் 2381. இவற்றினைப் பாடிய புலவர்க்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 473 பேர். 102 பாடல்களுக்குப் புலவர்களின் பெயர் தெரியவில்லை. கபிலர் என்ற புலவர் மட்டுமே 235 பாடல்கள் பாடியுள்ளமை குறிப்பிடத் தக்கது. வேறு புலவர் நால்வர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளனர். சிற்சில பாடல்களும், ஒவ்வொரு பாடல் மட்டுமே பாடிய புலவர்கள் மிகப் பலர்.

அப்புலவர்களுள் சிலர் நகரங்களைச் சார்ந்தவர்கள். பலர் சிற்றூர்களைச் சார்ந்தவர்கள். கற்பிக்கும் ஆசிரியர், பொன்வணிகர், ஆடை வணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத்தலைவர், அமைச்சர், பாணர், கூத்தர் முதலான பல்வேறு தொழில் செய்து வந்தவர்களும் கூட மிகுந்தப் புலமையுடன் பாடல் புனைந்துள்ளமை அறியவருகின்றது.

இவர்களேயன்றி, பெண்பாற் புலவர்கள் முப்பது பேர், அரசர்களாக, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து புலமை பெற்றுப் பாடியவர்கள் முப்பத்தொருவர்.

இவ்வாறு இலக்கியம் பாடிய புலவர்கள் பல்வகைப்பட்டவர்களாக இருந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் பகர்கின்றன.

அதோடு அரசர்களும் புலமை பெற்றிருந்தமையையும் அறியமுடிகின்றது. சங்க கால அரசர்கள் புலவர்களை ஆதரித்துப் போற்றியதுடன் நில்லாமல் தாங்களும் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் கல்வியின் சிறப்பைப் பற்றி ஒரு பாடல் பாடியுள்ளான். “வேண்டிய உதவிகளைச் செய்தும், மிகுதியான பொருள்களைக் கொடுத்துமாவது கல்வியினைக் கற்பது நல்லது என்பது அப்பாடல் கருத்து. பணிந்து பின் நிற்பதைப் பற்றிப் பொருள்கொள்ளாமல், கற்றோரை அணுகி வணங்கி கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே தன்மையான பிறப்பினை உடையவரயினும், சகோதரர்கள் நால்வருள்ளும் கல்வியின் சிறப்புக் காரணமாய் விளங்கும் இளைய மகனையே தாயும் விரும்புவாள். அரசும் மூத்தவனை விரும்பி வரவேற்காமல் இளையவனாகிய கற்றவனையே வரவேற்கும்.

அதோடு மட்டுமன்றி, கீழான குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்கினால், உயர் குடியில் பிறந்தவனும் அவனைப் பணிந்து வணங்குவான், என்றுப் பாண்டிய மன்னன் கல்வியின் உயர்வினை அப்பாடலின் கண் எடுத்தியம்பியுள்ளான்.

அடுத்து கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் தன் இறுதிக்காலத்தில் பாடிய பாடல்கள் ‘நெஞ்சை நெகிழவைக்கும் பாணியில் அமைந்துள்ளது. ஊரின் வடக்கே சென்று உண்ணா நோன்பியற்றி, அவன் தனின்னுயிர் நீக்கும் முன் இசைத்தவை கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யவல்லவை.

அடுத்து, இரும்பொறை என்ற சேர அரசனுக்கும் சோழனுக்கும் இடையே பகை மூண்டு போராகியது. போரில் சேரன் சிறைப்பட்டான். சிறைக்காவலர் தண்ணீர் கூடத் தராமல் நாயினும் கடையினனாக் அவ்வரசனை நடத்தினர். அதைக் கண்ட சேரன் தன் தவறினை உணர்ந்து அந்நீரைப் பருகாமல் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

மேலும் அரச குடும்பத்துப் பெண்ணான பூதப் பாண்டியனின் மனைவி, தன் கணவன் இறந்தபோது அவளும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கத் துணிந்தாள். அவ்வமயம் சான்றோர் சிலர் அவளை அணுகித் தடுத்தனர். அதற்கு அவள் ‘அந்தோ’ சான்றோர்களே! இடுகாட்டு ஈமத்தீ உங்களுக்குப் பொல்லாததாய் இருக்கலாம். எனக்கோ, என் கணவன் மாந்தபிறகு, தாமரைத் தடாகமும் ஈமத்தீயும் ஒன்றாயின என்று அந்நிலையிலும் கூட அவள் பாடிய பாடல் புறநாணூற்றில் அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளன.

அடுத்து பாண்டியர் குடும்பத்தைச் சார்ந்த இளம்பெரும் வழுதி என்பவன், ‘தன்னலமே இல்லாமல், பிறர் நன்மையையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் நிலைப் பெற்றுள்ளது’ என்ற பாடல் அவர்களின் உயரிய பண்பினை எடுத்தியம்புகிறது.


இவ்வாறு பல பாடல்கள் அரசர்கள் பாடியதாக சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

மேலும் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் ஒருவர் தாம் வாழ்க்கையில் பெற்ற தெளிவினைப் பின்வருமாறு உணர்த்துகிறார். அவர் இயற்றிய “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற பாடல், தத்துவ ஞானிகள் கண்ட சிறந்த முடிவை மிக எளிய முறையில் ஞயம்படத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. அதாவது,

யாருக்கும் சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர் என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் அனைவரும் நம் உறவினர்களே. தீமையும் நன்மையும் யாரோ நமக்கு செய்வதனால் ஏற்படுவதல்ல. துன்புறுதலும், ஆறுதல் பெறுதலும் அவ்வாறே பிறர் நமக்குத் தருவதால் வருவதல்ல. சாதல் என்பதும் புதுமையல்ல. வாழ்தல் இன்பமானது என்று எண்ணி யாம் மகிழ்ந்ததும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம் போல், உயிர் வாழ்க்கை இயற்கை முறை வழியே நடக்கும் என்பதை தகுதியானவர் கூற்றின் மூலம் அறிந்து தெளிந்தோம். ஆதலினால், இந்நில உலகில் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை; பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை”
என்ற பாடற் பொருள் வழி வாழ்க்கை அனுபவத் தெளிவைக் காண முடிகின்றது.

இத்தகைய அரிய அனுபவ உண்மைகளும், வாழ்க்கையோடு இயைந்த கற்பனைகளும் போற்றத்தக்க கலை வடிவங்களும் கொண்ட பாட்டுக்கள் சங்க இலக்கியங்களில் மிகுந்து காணப்படுகின்றன.

5. வீரம்

சங்க கால மக்கள் காதலையும் வீரத்தினையும் தம் இரு கண்ணெனப் போற்றிப் புரந்தனர். அதனால் தான் அவ்விலக்கியங்கள் அகம், புறம் எனப் பகுக்கப் பட்டுள்ளது.

புறத்திணை பற்றி அறிந்திட புறநானூற்றுப்பாடல்களும், அகத்திணை பற்றி அறிந்திட அகநானூற்றுப் பாடல்களும் பெரிதும் துணைபுரிகின்றன.

அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அன்பின் ஐந்திணைகளாக வகுக்கப் பட்டுள்ளன.

புறத்திணைகள் வெட்சி. கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் போன்றவகையில் வகை செய்யப்பட்டன.

இவையே அன்றி, கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியனவும் மக்கள் வாழ்வியலின் ஒழுகலாறுகளை விளக்குவதாய் அமைந்தன.

மேலும் இவற்றில் கூறப்படாது மறந்து விட்ட செய்திகளைக் கூற பொதுவியல் என்ற திணையும் இருந்தது.

சங்க கால மக்கள் வீரம் மிக்கவர்களாய் விளங்கினர். போர்களை இன்முகம் காட்டி வரவேற்றனர்.

“மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லை
தன்னுயிர் அஞ்சும் வினை”
என்பதற்கிணங்க, தன்னுயிரைப் பற்றி சிறிதும் கலக்கமுற்றாரில்லை. ஆடவரேயன்றி பெண்களும் வீரம் மிக்கவராய் சிறந்து விளங்கினர்.

வீரத்தாய் ஒருவள் போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்தான் அல்லது மடிந்தான் எனக் கேட்ட மாத்திரத்திலேயே அவனுக்குப் பால் கொடுத்த முலையை அறுத்தெறிகிறாள். என்னே அவ்வீரத்தாயின் நாட்டுப் பற்றும், துணிச்சலும்.

மற்றொரு பெண்ணோ முதல் நாள் போரில் தன் தந்தை யானையை வீழ்த்தி தானும் இறந்தான் என்பதனை செவிமடுத்து , மறுநாள் போருக்குத் தன் கணவனை அனுப்ப அவனோ பெரிய பசுக்கூட்டத்தினை மீட்டுத்தந்தபின் களத்திலேயே வீரமரணமுற்றான். மூன்றாம் நாளும் போர்முரசம் கேட்கின்றது. அவ் வீரத்தாய் பால்மணம் மாறா பச்சிளம் பாலகனாகிய தன் மகனைத் தட்டியெழுப்பி, கையில் குறுவாள் கொடுத்து, தலையில் நெய்தடவி போருக்குச் செல்கவென விடைகொடுத்தனுப்புகிறாள். என்னே அவ்வீர மங்கையின் வீரம்.

பெண்டீரே இவ்வாறெனில் ஆடவர் நிலை கேட்கவும் வேண்டுமோ?


ஆடவர் விரமற்றவராயின், அவன் அரசனேயானாலும் இடித்துரைக்கும் பாங்குடன் சங்க காலப் புலவர்கள் சிறந்து விளங்கினர்.

சான்றாக, ஒரு நிகழ்வினைக் காணலாம்.

சங்க காலத்திலேயே மாற்றரசனிடம் தூது செல்லும் வழக்கம் இருந்தது. அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் மனவேறுபாடு ஏற்பட்ட தருணம் அது. அதியமானோ ஆற்றல் மிக்கவன். எனவே ஔவையார் தொண்டைமானிடம் போர்த்தூதாய்ச் செல்கிறார்.

அவ்வாறு தூதாக வந்த ஔவையாரிடத்தில் தன்னுடைய போர்க்கருவிகளைக் காட்டி தன் ஆற்றலை வெளிப்படுத்த விரும்புகிறான் தொண்டைமான். எனவே போர்க்கருவிகள் இருக்கும் கொட்டிலில், போர்க்கருவிகளுக்கு நெய்யிட்டு அவை பளபளக்க அவற்றிற்கு மாலையும் அணிவித்து வைத்திருந்ததனைக் காண்பிக்கிறான். இதனைக் காணுற்ற ஔவையோ, அரசே நின் போர்க்கருவிகள் உள்ள கொட்டிலும், இங்குள்ள கருவிகளும் எத்தனை அழகாய் உள்ளன. ஆனால் எங்கள் அதியமானின் கொட்டிலிலுள்ள போர்க்கருவிகள் பகைவர்களைக் குத்திக் கிளறிய காரணத்தாலும், மாற்றனின் தலைகள் பலவற்றினை போர்க்களத்தில் பதம் பார்த்து உருளச்செய்ததாலும், வலிமை மிக்க யானகள் பலவற்றினை வெட்டி வீழ்த்தியமையாலும் கூர்மை சிதைந்து, பார்க்க அழகற்றவையாய் முனை மங்கி, செப்பனிடும் பொருட்டு கொல்லன் உலைக்குச் சென்றுள்ளன. என்று அதியனின் வீரத்தினை சொல்லாமல் சொல்லுகின்றார்.

அடுத்து, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனோ போர்த்திறம் மிக்க வீரரோடு கூடி தம் பகைவர் அழியும் வரை உண்ணுதலை நினைக்காது போரிட்டு வெற்றிபெற்ற பின்னரே உண்ணக் கூடியவன் என்று அவனது வீரத்தினைப் புகழ்கிறார் குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர்.

அடுத்து, கானப் பேரெயில் கடந்த உகிரப் பெருவழுதியின் வீரத்தினை, ஐயூர் மூலங்கிழார் பின்வருமாறு பாடுகின்றார். புலவர் அறிவின் எல்லையைக் கடந்த புகழும் வீரமும் மிக்கவன் கானப் பேரெயில் கடந்த உகிரப் பெருவழுதி. அவன் வலிமையான கையை உடைய கொல்லன் உலைக்களத்தில் இரும்பால் குடிக்கப்பெற்ற நீரை மீட்பதற்கு அரியது போன்று வேங்கை மார்பன் வருந்துமாறு, நாள்தோறும் வெற்றி கொள்ளத் தும்பை மாலையை அணிந்தவன். புலவர் பாடும் போர்த்துறைகள் அனைத்தையும் கொண்ட வெற்றி வேந்தன் எனப் போற்றுகின்றார்.

அடுத்ததாக, யாரலும் நெருங்க முடியாத துணிவுடையவன் என்றெண்ணி, உலகம் தாங்காத மிகப் பெரிய படையை உடைய தலையாலங் கானத்தில் நிகழ்ந்த போரில் பகைவரை எதிர் நின்று அழித்த எமன் போன்றவலிமையுடையவன் பாண்டிய நெடுஞ்செழியன் என்று அவனின் வீரத்தினைப் புகழ்கின்றார் புலவர் கல்லாடனார். மேலும், நட்சத்திரங்கள் மின்னும் வானில் பரவிய இருள் நீங்க விரைந்து செல்லும் இயல்பை உடைய வெப்பம் மிக்கக் கதிரவன், நிலவொளி தரும் திங்களொடு நிலத்தில் கூடினாற்போல், வெல்வதற்கரிய வலிமை வாய்ந்த வஞ்சினம் கூறிய சேர, சோழராகிய வேந்தர்களை அரிய போர்க்களத்தில், இறந்துபடப் போரிட்டு, அவர்களின் கட்டுமிக்க முரசினைக் கைகொண்டவன் பாண்டிய நெடுஞ்செழியன் என்றும் புகழ்கின்றார்.

இவ்வாறு பல புலவர்களால், பல அரசர்களின் வீரம். சங்க இலக்கியங்கள் வழி பயின்று இன்பம் துய்க்க வல்லது.

6. நன்றி மறவாத் தன்மை

செய்ந்நன்றி மறவாமை என்பது செந்தமிழ் நாட்டு மக்களின் தலையாய பண்புகளுள் ஒன்றாகும். நன்றிமறந்தவர்களை இங்கு காண்பது அரிது. சங்ககாலக் கவிஞர்கள் தங்களை பேணிப் புரந்த வள்ளல் பெருமக்களையும், அவர்தம் நாடுகளையும், தாங்கள் கற்ற கல்வி வாயிலாக உவமையாகவும், பிறவற்றாலும் எடுத்தியம்பியுள்ளனர். எப்படி தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை கம்பர் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளாரோ, அவ்வாறே புலவர் பெருமக்களும் புரவலர்களைப் பலவாறு வாழ்த்தி வழிபட்டுள்ளனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையும் செய்ந்நன்றியறிதல் என்ற ஓர் அதிகாரத்தினையே எடுத்தாண்டுள்ளார்.

7. தெய்வ நம்பிக்கையும், பிற நம்பிக்கைகளும்.

சங்க கால மக்கள் இயற்கை சீற்றங்களிலிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கட்புலங்ளுக்குத் தென்படாத சக்திகள் தம்மைச் சுற்றியுள்ளமையை உணர்ந்தனர். எனவே இயற்கையையே கடவுளாகக் கருதி வணங்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால். அவற்றை வழிபட்டனர்.

இவையேயன்றி மேலும் சில வினோத நம்பிக்கைகளும் அவர்களிடையே இருந்தன. அதவது, இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் என்றும், மயிர் நீப்பின் கவரிமான் உயிர் வாழாது என்றும், இடப்பக்கத்தில் விழும் இரையை புலி உண்ணாது என்றும் நிலவை பாம்பு தீண்டுவதே கிரகணம் என்றும் நம்பினர்.

மேலும், போர்க்களத்தில் காயமடைந்தவர்களைச் சுற்றி பேய்கள் அவர்களின் குருதியைக் குடிக்க நிற்கும் என்பதாலும், பிறந்த குழந்தைகளை தீய சக்திகள் தாக்கிவிடும் என்பதாலும், ஐம்படைத்தாலியை வெண்கடுகுப் புகைக்காட்டி தூபமிட்டுக் கட்டினர். அதோடு இறந்தவர்களுக்கு நடுகல் நட்டு அவற்றையும் பலவாறு வழிபட்டனர்.

சோதிட நம்பிக்கை:
சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு சோதிடம் கூறினர். பல்லி சொல்லுக்கும் பலன் கண்டனர். கண் துடிப்பிற்கும் விளக்கம் காட்டி சகுனம் கூறினர். குறி கேட்டும் பலாபலன் அறிந்தனர். திருமண முகூர்த்தம், தும்மலுக்கும் காதலுக்கும் பொருத்தம் அல்லது சகுனம் கூறல், நாள் கோள் நம்பிக்கை, கனவு மற்றும் சகுனங்களில் நம்பிக்கை, பலியிடுதல், இறைவன் தம் மீது வந்ததைப் போல் ஆவேசம் ஆடுதல், பேய் பிசாசு முதலியவற்றில் நம்பிக்கை, போன்றவகையில் பல நம்பிக்கைகளில் ஈடுபாடு கொண்டு அதற்கேற்றார் போன்று வாழ்க்கை நடத்தினர்.

9. காதல்
அகத்திணைக்கே நமது இலக்கியங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன. புறத்திணைக்கு ஒரு இயலை மட்டுமே ஒதுக்கிய தொல்காப்பியர், அகத்திணைக்கு களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல், பொருளியல் எனப் பல இயல்களை ஒதுக்கி, அகத்துறைக்கு மகுடம் சூட்டுகிறார். சங்ககாலப் புலவர்களில் பெரும்பாலானோர் புறத்தைவிடவும் அகத்துறைப் பாடல்களையே அதிகம் புனைந்துள்ளனர். சங்கப்பாடல்களின் மொத்தத் தொகை 2,381 எனில் அதில் அகத்துறைப் பாடல்கள் 1,862... சங்கப் புலவர்கள் 473 பேரில் அகத்துறை பாடி அகம் மகிழ்ந்தோர் 378 பேர்.

ஆண் பெண் ஆகியோருக்கிடையே நிகழும் காதல், காதல் சார்ந்த நிகழ்வுகளே அகத்திணையில் பெரும்பாலும் சுட்டப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் இன்பியலாகவோ அன்றி துன்பியலாகவோ நிகழ்ந்துள்ளது. இதனையே தொல்காப்பியமும், புணர்சி, புணர்சி நிகழ்தலுக்கு உரிய இடங்கள், நிலங்கள் போன்றவகையில் சுட்டுகின்றன.

சிலபோழ்து காதல் கைகூடாத நிலையினில் ஆடவர் மடலேறுதலும் உண்டு. அவ்வமயம் உடலையே கிழிக்கும் பனையோலையில் ஊர்ந்தவாறு பொதுமன்றத்திற்கு வருவர். அவ்வாறு வருவதன் மூலம் பெண்வீட்டாரின் மனம் மாறி தன்னை ஏற்பர் என்பதால் அவர்கள் அவ்வாறு செய்தனர். அவ்வாறு காதல் கைகூடா நிலையில் மலையினின்று தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டு.

பெண்கள் காதலன் தன்னுடன் இருந்த பொழுதும், தன்னை விட்டுப் பிரிந்த பொழுதும் தன் நிலை எவ்வாறு இருந்ததென்பதையெல்லாமும், இன்னும் பிறவற்றையும் தன் தோழியிடமே பகிர்ந்துகொள்வாள்.

ஒரு அற்புதமான காட்சியினை இங்குக் காணலாம். தலைவன் தன் காதலை வெளிப்படுத்த வரும் பொழுது தலைவி ஒரு புன்னை மரத்தினடியே நிற்கிறாள். அவள் அம்மரத்தினை தன் அக்காள் எனச் சுட்டி அங்கு காதல் மொழி பேச வேண்டாம் என மறுக்கிறாள். தலைவனோ குழப்பத்தில் ஆழ்கிறான். அதற்கு தலைவி புகன்ற மறுமொழியே வியந்து நோக்கற்குரியது. அதாவது தலைவியின் தாய் தான் சிறுமியாக இருந்த பருவத்திலே அப்புன்னை மரத்தினை அங்கு நட்டுவித்தாளாம். அது இப்பொழுது பெரிதாகி வளர்ந்திருக்கின்றது. தாய் தன் இளம் பிராயத்தில் அப்புன்னை மரத்தினைத் தன் குழந்தைபோல் பாவித்து வளர்த்தமையால் தற்சமயம் அப்புன்னை தலைவியின் அக்காள் முறையாயிற்றாம். எனவே அங்கிருந்து காதல் மொழி பேசவேண்டாம் என மறுப்பதாக ஒரு பாடல் அழகாக எடுத்தியம்புகின்றது.

அதேபோன்று தலைவனும், தலைவியைப் பிரியும் சூழலில் பார்க்கும் பொருள்கள் யாவிலும் அவளையே காண்பது போன்ற சுவையூட்டும் செய்திகள் எண்ணற்றவை அகப்பொருள் பாடல் வழி அறியமுடிகின்றது.

10 பழக்க வழக்கங்கள்:

 வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வேத்தியல், பொதுவியல் என்று பகுத்துக் காண்பது தமிழ்நெறி.
 பொதுமக்களின் பழக்க வழக்கங்கள் சங்ககால நெறிப்படி ஐந்திணைப் பாகுபாட்டில் தொகுக்கப்படுகின்றன.
 ஒருவர் சமைக்கும் அடுப்பினை பிரிதொருவர் காண மாட்டார்.
 அரிசி மாவால் பெண்கள் கோலமிடுவர்.
 ஆண்கள் பூமாலை அணிந்து கொள்வதைப் போல் பெண்கள் தழை ஆடைகளை ஒப்பனைக்காக அணிவர்.
 பெண்கள் செந்நிறம் பூசி தான் பூப்பு எய்திய செய்தியை வெளியிடுவர்.
 ஊர்ப் பொது இடத்தில் கோவில் சுவரில் கடவுள் ஓவியம் வரைந்து அதற்கு பலிப் படையல் செய்வர்.
 பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வர்.
 தாலியைப் புதுநாண் என அழைத்து அதனை ஒரு காப்பீடாகக் கருதுவர்.
 நிறைமதி நாளில் விடியற்காலையில் நடைபெறும் திருமணத்தில் உழுத்தம் பருப்பு வடையுடன் பெரு விருந்து அளிக்கப்படும். பந்தல் போட்டு புதுமணல் பரப்பி, விளக்குவைத்து, மாலைகள் தொங்கவிடப்படும்.
 வயது முதிர்ந்த பெண்கள் நிறைகுடத்துடன் முன்வர புதியவர் சிலர் விளக்குடன் பின்வருவர். மணமக்களின் தலையில் நீரில் நனைத்த பூக்களைத் தூவி வாழ்த்துவர்.
 கணவனை இழந்த பெண்ணின் தலைமயிர் கொய்யப்படும். கை வளையல்கள் களையப்படும். அல்லி இலையில்தான் அவர்கள் உணவு உண்ணவேண்டும்.
 அடுத்து ஓரையின் முக்கியத்துவத்தைக் காணலாம். ஓரையை இக்காலத்தில் முகூர்த்தம் என்கிறோம். ஆனால் அக்காலத்தில் ஒரு நாளைப் பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை என்று பகுத்துக் காண்பதை தமிழர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 அடுத்ததாக விளையாட்டு என்று வரும்பொழுது, மகளிர் மணலில் கழங்கு விளையாடுவர். கழங்குக் காய்கள் முத்தாகவோ, முத்துப் போன்ற வெண்ணிறக் கூழாங் கற்களாகவோ இருக்கும். மகளிர் அந்தக் கழங்குக் காய்களை மணலில் பரவி ஒன்றை ஒன்று தொடும்படி சுண்டி விளையாடுவர்.
 அடுத்து திருவிழாக்காலங்களின் போது, ஊரில் விழா நடக்கும் காலத்தைக் குயவன் தெருத்தெருவாகச் சென்று அறிவிப்பான் .
 வெறியாட்டு நிகழும்போது வெறியாடவைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரளிப் பூ மாலை) சூட்டுவர்.

இவ்வாறு பல பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றியதை நம்மால் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகின்றது.


11 அறிய உதவும் சான்றுகள்:

சங்க கால மக்களின் வாழ்க்கை வரலாற்றினை, இலக்கியம், கல்வெட்டுக்கள், தொல்பொருள் அகழ்வாராய்வுகள், அவர்கள் பயன்படுத்திய பல்வகைப் மட்பாண்டங்கள், செங்கல் கட்டமைப்புகள், பண்டைய எழுத்து முறை, அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள், குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள், ஆற்றுப் படுகைகளில் கிடத்த நாணயங்கள், அரசர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், ஆகியன சங்க கால மக்களின் வாழ்க்கை ஒழுகலாறுகளை அறிய உதவும் சான்றுகளாக விளங்குகின்றன.

முடிவுரை:

இவ்வளவு சிறப்பியல்புகளைத் தன்னிடம் கொண்டுள்ளமையினாலேயே பல நூற்றாண்டுகளைக் கடந்தும் வாழும் கலைச்செல்வமாக சங்க இலக்கியம் ஒளிர்விட்டு பரந்து பரிணமிக்கின்றது. அதனுள் சிலவற்றினையே இங்கு குறிப்ப்ட்டுள்ளேன். மேலும் பல நிகழ்வுகளை அறிந்துகொள்ள அவற்றை முமுமையாகப் பயின்றால் நலம் பயக்கும். மேலும் அவ்விலக்கியங்களைப் பொன்னே போன்றுப் போற்றிப் பரவ வேண்டியது தமிழரின் தலையாய கடமைகளுள் முதன்மையானதும், உயரியதும் ஆகும்.

“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! “

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்! ஓங்குக அதன் புகழ்!

----------------------------
வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
பிழையிருப்பின் பொறுத்தருள்க.


அன்புடன்,
திருமதி ஸ்ரீ.விஜலஷ்மி,
தமிழாசிரியை,
கோயம்புத்தூர் -22

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி (24-Oct-16, 2:42 pm)
Tanglish : thamizhar panpadu
பார்வை : 38914

சிறந்த கட்டுரைகள்

மேலே