மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை நூல் ஆசிரியர்கள் தமிழில் கவிஞர் வதிலை பிரபா ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை !
நூல் ஆசிரியர்கள் :
தமிழில் கவிஞர் வதிலை பிரபா !
ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
******
ஒவியா பதிப்பகம் 17-13-11 ஸ்ரீராம் வளாகம்,
காந்தி நகர் இலக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202
144 பக்கங்கள் விலை ரூ 125.

மகாகவி என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபாவின் ஹைக்கூ கவிதைகள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வந்துள்ள நூல் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் அமரன், அவரும் ஒரு ஹைக்கூ படைப்பாளி என்பதால் மிக நுட்பமாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் பாராட்டுகள்.

இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கு இது 4-வது நூல். ஒவியா பதிப்பகத்தின் 50-வது நூல் ஹைக்கூ உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் படைப்பாளிகளின் தரமாக படைப்பாக நூல் வந்துள்ளது. வதிலை பிரபா அவர்கள் சிற்றிதழ்கள் சங்கத் தலைவராக உள்ளார். தொடர்ந்து முகநூலில் படைப்புகளை எழுதி வருபவர். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி ஹைக்கூ கவிதைகள்.

மகாகவி பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் என்றார். மகாகவி பெயரில் இதழ் நடத்தும் ஆசிரியர் வதிலை பிரபா அவர்கள் சிறந்த மொழி பெயர்ப்பாளரான, ஹைக்கூ படைப்பாளியான அமரன் அவர்களிடம் வேண்டி ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து தமிழின் படைப்பை உலக மொழியான ஆங்கிலத்திலும் எழுதி வாங்கி, உலகெலாம் ஹைக்கூ பரவிட வழி வகை செய்துள்ளார். பாராட்டுகள்.

புயலின் பெரு நாசத்துக்கப்பால்
தனக்கான காற்றைப் பிரித்தெடுக்கிறான்
புல்லாங்குழல் இசைப்பவன்!

AFTER CYCLONIC DISASTER
SEGREGATING HIS WIND

THE FLUTIST!

அய்யகோ புயல் வாழ்க்கையை சீரழித்து விட்டதே என்ற வருத்தத்தில் சோகத்தில் சேர்ந்து விடாமல் புல்லாங்குழல் வாசிக்கிறான் என்பதை காட்சிப்படுத்தி துன்பத்திற்கு துவளவேண்டாம் இன்புற்று இருங்கள் என்ற கருத்தை உள்ளீடாக வைத்துள்ள நல்ல ஹைக்கூ இதில் ‘புல்லாங்குழல் இசைப்பவன்’ என்பதை ‘புல்லாங்குழலில்’ என்று இருந்தாலே போதும் ‘இசைப்பவன்’ என்ற சொல் தேவை இல்லை என்பது கருத்து.
அடுத்து ஒரு ஹைக்கூ.

சின்ன பொறிக்குள்
மின்னல் தெறிப்புகள்
ஹைக்கூ ! ஹைக்கூ !

FROM OUT OF LITTLE NOOSE
LIGHTNING SPARKS
HAIKU ITS HAIKU !

ஒரு நல்ல ஹைக்கூ என்பது படிக்கும் வாசகரின் சிந்தையில் சிந்தனை பொறியை, சிந்தனை மின்னலை தோற்றுவிக்க வேண்டும். ஹைக்கூ இலக்கணத்தை ஹைக்கூவாக வடித்தது சிறப்பு. ஹைக்கூ என்று ஒரு முறை சிந்தித்து போதும் என்பது என் கருத்து. சொற்சிக்கனம் என்பது ஹைக்கூவிற்கு மிகவும் அவசியம்.

சிற்பி ஒரு கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் கிடைப்பது அழகிய சிலை. அது போல மனதில் தோன்றிய கருத்தை முதலில் எழுதிவிட்டு அதில் தேவையற்ற சொற்களை நீக்கி விட்டு மூன்று வரிகளுக்குள் ஒழுங்கு படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின்னலை வைத்தால் அழகிய அற்புத ஹைக்கூ உருவாகும். அந்த இலக்கணப்படி இந்த நூலில் ஹைக்கூ விருந்து வைத்துள்ளனர். பாராட்டுகள்.

இயற்கையை வாசகர் கண் முன் காட்சிப்படுத்துதல் ஹைக்கூ கவிதையின் சிறப்பியல்பு. அந்த வகையில் நூல் முழுவதும் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் உள்ளன.

திமிறியெழும் அதிகாலைச் சூரியன்
நீலக்கடலின் பேரமைதி யுடைத்து
இரை தேடும் பறவை.

BURSTING RISES EARLY SUN
BREAKING OPEN SILENCE OF BLUE SEA
BIRD AFTER FEED.

இந்த ஹைக்கூ கவிதை படிக்கும் வாசகரின் மனக்கண்ணில் சூரியன், கடல், பறவை காட்சிக்கு வருவது கட்டாயம் என்று கூற முடியும்.

ஒரு ஹைக்கூ படிக்கும் போது அது தொடர்பாக மற்றவைகளும் வாசகர் நினைவில் வந்து போக வேண்டும். அது தான் சிறந்த படைப்பு. கீழ்வரும் ஹைக்கூ படித்த போது இலங்கைப் படையினரால் தினந்தோறும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் நினைவு எனக்கு வந்தது. உங்களுக்கும் வரும் படித்துப் பாருங்கள்.
ஆழப் பெருங்கடலில்
வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள்.
துடுப்புகள் ஓய்வெடுக்கின்றன!

DEEP SEA – FISHING
WHILST CASTING NETS
THE RESTING OARS!

ஜப்பானில் மரத்தால் வீடு கட்டும் போது ஆணி அடித்த போது அந்த ஆணியில் ஒரு பல்லி மாண்டிக் கொண்டது. 5 வருடங்கள் கழித்துப் பார்த்த போது அந்தப் பல்லி உயிரோடு இருந்தது எப்படி என்று பார்த்த போது மற்றொரு பல்லி உண்வு எடுத்து வந்து ஊட்டி இருக்கிறது. இந்தத் தகவலை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் மேற்கோள் காட்டி இருந்தார்கள். அன்று படித்த இந்த நிகழ்வு என் மனக்கண்ணிற்கு வந்து போக உதவியது இந்த ஹைக்கூ.
பாழடைந்த வீடு
இன்னமும் வாழ்கின்றன
பூச்சியுண்ணும் பல்லிகள் !

DETERIO RATED MANSION
STILL EXIST
LIZARDS-SURVIVING ON FLIES.

இயற்கை ரசிப்பது ஒரு கலை. இயற்கையை ரசித்துப் பழகினால் இதயம் இதமாகும். கவலைகள் காணாமல் போகும். பரவசம் நம் வசமாகும். எனக்கு இயற்கை ஆர்வம் அதிகம் உண்டு. அழகிய மலர்களை எங்கு பார்த்தாலும் அலைபேசியில் படம் எடுத்து முகநூல், வலைப்பூவில் பதிவு செய்துவிடுவேன்.
பூ என்றால் பூக்கத்தான் செய்யும் இதை படம் எடுத்துப் போட வேண்டுமா? என என் இளைய மகன் கௌதம் கேலி செய்வான். நான் பொருட்படுத்தாமல் மலர்களின் படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறேன்.
நூல் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபா அவர்களும் இயற்கை நேசர் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்.

குளிர் பனிக்காலை
பூவிதழ் பனித்துளியில்
முகம் பார்க்கும் சூரியன்!

FROSTY MORN
AT DEW'D PETALS OF FLOWERS
SUN, VIEWING ITS COUNTENANCE.
நூல் ஆசிரியர்கள் இருவருக்கும் பாராட்டுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (8-Nov-16, 9:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 411

மேலே