காலம் விசித்திரமான கற்பனையில்

காலம் விசித்திரமான கற்பனையில் ...
பிறப்பிலே எவன் கண்டான் சாதியினை
ஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை
இச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா
கற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே !

விழிகளில் தெரிகிறதே
சாதிவெறி எரிகிறதே !
அறிவுள்ள அறிவிலியும்
அறைகூவல் விடுவதேனோ !
இருவேடத்தால் இருநிலையும்
இதயத்தில் கொள்வதேனோ !

மதிகெட்டு வணங்குகிறார் முழுமதியை
மதியுள்ளவன் கால்பதித்து ஆய்கிறான் !
சாதிமதமென வேற்றுமை காண்போர்
சந்திரமண்டலம் சென்றும் பிரிந்திடுவார்
சாதிக்கொரு கட்சியும் தொடங்கிடுவார் !

மதம்பிடித்து அலைகிறார் மதமென்று
பித்தர்களாய் பிதற்றுகிறார் பிரிவென்று !
சுகம்காண நாடுகிறார் விலைமாதுவை
தேகநிலை ஒன்றே பிராதனமென்கிறார்
திரும்பி வருவதில்லை வேற்றுசாதியென !

சாதிமதம் கண்டதால் சாய்ந்தது மனிதமும்
வன்முறையில் துவங்கி வளர்கிறது வன்மமும் !
பிறப்பதும் மனிதன் சாதிமதமென பிரிந்திடவா
இறக்கும் நொடிவரை இதயத்தைத் துறந்திடவா !

சிந்திப்பீர் பகுத்தறிவுடன் சினமின்றி ....!

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Nov-16, 2:57 pm)
பார்வை : 85

மேலே