அருஞ்சொற்பொருள் -கார்த்திகா அ

உன்னை ஞாபகமூட்டும்
அதே பாடலை
இரண்டாம்முறையாய் ஒலிக்கவிட்டு
நீ சிதற விட்ட இட்லிகளை
நான் உண்டுவிட்டு
அவசரமாய் கை கழுவியதில்
சிந்திய நீரை கவனமாய்
காட்டன் புடவையில் படாமல்
காப்பாற்றி கல்லூரி வந்து சேர்ந்தபோது மணி எட்டரை
நீயும் உன் இடம் சேர்ந்திருப்பாய்
ஏழு வகுப்புகள் புன்னகை அணிந்து
இடைவேளைகளில் உன் சிரிப்பின் நினைவினில் கிறங்கி
கொஞ்சமாய் பிரிவின் சோகம் கண்டு
ஐந்து மணிக்கு என்னை மீறிய
வேகத்துடன் வீடு வந்து சேர்கையில்
முன்பே வந்து விட்டிருந்தாய் நீ
உனைக் கண்டவுடன் பெய்யும்
அடைமழையில் நனைவதற்குள்
குறுக்கிட்டுக் கட்டிக்கொள்கிறாய்
உச்சி முகர்ந்து
உன்னை நோக்குகையில்
அழுகுரலில் கரைகிறாய் நீ
அம்மா வந்தாச்சு என்று..

எழுதியவர் : கார்த்திகா அ (18-Nov-16, 3:06 pm)
பார்வை : 223

மேலே