நிரப்பவியலா வெற்றிடம்
நெகிழிப்பையினூடே
சிவப்பு திரவம்
என் சரீரம் புகுந்து
செயலற்றுக் கொண்டிருக்கிறது .
இரத்த தானம் செய்தபின்
களைப்பு தீரத் தந்த
குளுக்கோஸ் அருந்தாது
வெறித்த வெளியில்
நிலைத்த பார்வையில்
அப்பா !
தாலியைத் தவிர
இதர மஞ்சள் உலோகம்
அனைத்தும் மருந்தாகி
மருத்துவருக்கும்,
எனக்கும் உணவாகி
கரைந்து கொண்டுள்ளது,
"பிழைத்துக் கொள்வேனா அம்மா ?"
செவி தாக்கிய எனது கேள்வியால்
திரும்பி நின்று,
யாருமறியாமல்
கண்துடைத்துக்கொண்டே
தூசி என்கிறாள்
அம்மா!
இந்த வெற்றிடத்தை
நிரப்பவியலா நிலையில்
இன்னும் சில மணித்துளிகளில்
நான் முற்றுப் பெறக் கூடும்.
"இரத்தப் புற்று தாங்காது டீ "
செவிலிகள் தங்களுக்குள்
கிசுகிசுப்பதை என் செவிப்பறை
உள்வாங்க மறுதலிக்கிறது
என்றுமே இறைவேண்டலில்
ஒவ்வாத மனம்
இன்று அடைக்கலம்
மீண்டும் ஒரு முறை
பிறக்கவேண்டி
அம்மையின் மடிதேடி.....