தமிழ்

ஈன்றெடுத்த அன்னைக்கு ஈடாக
என்றென்றும் கருதும் தாய்மொழி
நாமென்றும் வணங்கும் தமிழ்மொழி !
புவியேப் போற்றிடும் புலவர்களும்
அகிலமே அறிந்திட்ட அறிஞர்களும்
கட்டிக் காத்திட்டத் தமிழ்மொழி !

மேதினி எங்கும் மேன்மையுடன்
செவிகளில் கேட்கும் சுவையுடன்
இலக்கணம் கொண்ட இனியதமிழ்
இலக்கியம் நிறைந்த இனியசுவை
காவியங்கள் தந்திடும் கனிச்சுவை
அகத்திற்கு அளித்திடும் பல்சுவை !

செம்மொழி நிலைகண்ட எம்மொழி
செழித்துத் தழைத்திட்ட தமிழ்மொழி
சொத்தானது நெஞ்சில் நமக்கென்றும் !
முதல்மொழி மூத்தமொழி நம்மொழி
பன்மொழிப் பாவலரும் போற்றுகின்ற
குறள்தந்த வள்ளுவனின் தமிழ்மொழி !

தமிழர்க்கு முகவரியாம் உலகெங்கும்
பண்பாட்டுச் சின்னமாம் பழந்தமிழும்
வளர்ந்திடும் வாழ்ந்திடும் வையகத்தில்
புகழ்கொடி பரப்பிடும் புவியில் என்றும் !

தமிழராய் பிறந்ததே பெருமை நமக்கும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Dec-16, 7:22 am)
பார்வை : 721

மேலே