புத்தாண்டு வாழ்த்துக்கள்-2017
புத்தாண்டு பிறந்தவுடன்
புத்துணர்ச்சியும் பிறந்திருச்சு
என்ன சொல்வேன், ஏது சொல்வேன்
நடந்ததினி நடக்காதென உறுதியுடன்
உடுக்கை ஒலி அடித்துச் சொல்வேன்
உறுதி மொழி எடுக்கச் சொல்லி
பரமசிவன் உடுக்குகொட்டிப் பாடி வந்த
பாரதத்தின் பழம்பெருமை எடுத்துச்சொல்ல
நாட்டில் நடக்கப்போகும் நல்லதெல்லாம்
நாள் முழுதும் அடித்துச் சொல்வேன்...
சென்றவருடம் நடந்ததெல்லாம்,
சென்ற இடம் தெரியாதைய்யா
புதுவருடப் பிறப்பாலே, கசப்பெல்லாம் மறைந்து
பழசெல்லாம் பசாய் பறந்ததப்பா
செவிகுவித்து, நன்றாய்க் கேளு
வாராதினி வர்தாவும், நாடாவும்
பகட்டும் ஆடம்பரமும் அதிகரித்தாலும்
பக்தி மட்டும் இனிகுறையாதய்யா
ராகு சேர்ந்திருப்பதால், ராணுவ பலமிகுந்து
அண்டைப் பகை வலுவிழக்கும்
அரசுக்கு வருவாய் பெருகுமென்று
ஆரூடம் சொன்னது அருமையாகப் பலித்ததின்று
புத்தாண்டில் பழயன கழிதலும், புதியன புகுதலும்
பொங்கலின் பொன்மொழி ஆனாலும்
பழயநோட்டழிந்து புதுநோட்டு புகுந்ததய்யா
பற்றாக்குறை நீடித்தாலும், பழயநிலை திரும்புமப்பா.
குறியொன்று சொல்லவந்தேன்
கூர்ந்து கருத்தில் கவனம் கொள்ளவேணும்.
சுக்கிரனின் உச்சத்தால்
சுயதொழில் சிறக்குமன்றோ
புதனோடு சூரியனும் சேர்வதால்
புத்தாண்டில் புதியதொழில் வளர்ச்சிபெறும்
விளையாட்டாகச் சொன்னாலும், இனி
விளைநிலங்கள் விருத்தியாகும்
வேளாண்மை சிறக்கவேணும்
விவசாயி தற்கொலை மறையவேணும்
கையூட்டு அழியவேணும்,
கறுப்புப்பணம் ஒழியவேணும்
கால்கடுக்க எடிம்மில் காலம்பூராநிற்பதைக்
காலம்தான் அறியவேணும்.
குறிப்பறிந்து குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரனல்லநான்
குறிக்கோளை முன்னிருத்தி
குருதி சொட்டும் உழைப்பாலே..
நாட்டின் வருமானம் அதிகரிக்க
நல்லதொரு வழிபிறக்குமென்று..
உலகமுய்ய வழிசொல்லும்
உத்தமனய்யாநான்..
புத்தாண்டு பிறக்குமின் நன்னாளில்
பாரம்பரியக் கருவியானாலும்
உண்மைசொல்லி ஒவ்வொன்றாக அடிக்குது
ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஒலிக்குது
புத்தாண்டின் தொடக்கத்தில் பாரதத்தின் பெருமை
பறைசாற்றுமே எந்தன் உடுக்கையொலி
இந்த வருடமெல்லாமே
இனிதே நடக்குமென்று
நல்லகுறி சொல்லவந்தேன்
நாளுமிங்கே தவறாமல்...
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி