பெண்மையைப் போற்றுவோம்

மாதவம் செய்து
மங்கையாய்ப் பிறக்குமுன்னே,
மலையாய் இடறும் வழித்தடைகள்
ஏராளம் ஏராளம்..

கள்ளிப்பாலாய்
கொல்லும் நெல்லாய்
கொலை மாத்திரையாய்,
மாய்க்கும் தடைபல கடந்து
பிறக்கிறாள் பெண்ணாய்..

பிறந்தது பெண்தானாவென
பெண்ணே
சலித்திடப் பிறந்து,
பாலைநிலப் பயிராய் வளர்ந்து
பருவத்தை எட்டுகிறாள்
பாதுகாப்பில்லா உலகில்..

பல்லிளிப்பு
பலாத்கார மலைகளைத் தாண்டி
புகுந்திடும் மணவாழ்விலும்,
மலிந்து கிடக்கும்
மாற்றங்களும் ஏமாற்றங்களும்..

பின்னுள்ள வாழ்வில்
பிள்ளைக்காக
பிறருக்காக என்ற ஓட்டத்தில்,
தன்னை மட்டும்
மறந்த
துறவுப் பயணம்..

இத்தனையும் தாண்டி
இதற்கு மேலும்
இடர்களையும் கடந்து
நடந்துதான்
ஆணின் வெற்றிப் படிக்கட்டாகி
வெந்து போகிறாள்..

இவளின்
சாதனைக்குமுன்
சரித்திரங்களெல்லாம்
சாதாரணம்தான்..

பெண்மையைப் போற்றுவோம்
புது உலகம் காண்போம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jan-17, 7:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே