பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று

கடவுள் வாழ்த்து ...!!!
`````````````````````````````````
கற்பகவி நாயகனே! கந்தனுக்கு மூத்தோனே!
பொற்பதம் பற்றியுனைப் போற்றிடுவேன் !- நற்றமிழில்
வெண்பாக்கள் யான்புனைய வேண்டித் துதித்திடுவேன்
வண்ணமுற ஆசி வழங்கு .
அவையடக்கம் ...!!!
```````````````````````````````
வெண்பா வெழுதிட மேடைதந்த மேன்மைமிகு
வண்டமிழ்ப் பேரவை வாழியே ! - செண்டுமலர்த்
தந்துன்னைப் பாராட்டித் தாய்த்தமிழா லன்புடன்
வந்தனம் செய்வேன் மகிழ்ந்து .

பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று ...!!!
**************************************************
மார்கழிக்(கு) ஓய்வளித்து மங்கலமாய்த் தைப்பிறந்தாள்
சீர்மிகவே பொங்கல் திருநாளில் ! - ஏர்பிடிக்கும்
நல்லுழவர் வாழ்வும் நலம்பெற வந்தனள்
எல்லையிலா ஆனந்தம் ஏற்று . 1.

தீயன யாவையும் தீயில் பொசுக்கிவிட்டுத்
தூய மனத்துடன் சூரியனை - நேயமுடன்
போற்றித் துதிக்க புகழோடு பொன்பொருளும்
ஊற்றாய்ப் பெருகும் உவந்து . 2.

முற்றத்தில் கோலமிட்டு முப்பக்கம் கல்லடுக்கிச்
சுற்றமுடன் கூடிச் சுவையாகப் - பொற்புடன்
புத்தரிசி பானையிலே பொங்கிவர, பூரிப்பில்
சித்தங் குளிருஞ் சிலிர்த்து . 3.

பொங்கிவரும் நேரத்தில் பொங்கலோ பொங்கலெனக்
கொங்குமொழிப் பெண்டிர் குலவையிட - அங்கே
மகிழ்ச்சிப் பெருக்கால் மனமதும் துள்ளிப்
பகிர்ந்திடு மன்பினைப் பார் . 4 .

மஞ்சள் குலையுடனே மாவிலைத் தோரணமும்
கஞ்சமல ரோடு கரும்புவைத்துப் - பஞ்சுத்
திரிபோட்டு நல்லெண்ணெய் தீபத்தை யேற்றிப்
பரிதிக்குப் பொங்கல் படை .. 5.

கூடிப் பகிர்ந்துண்டு கொண்டாடிக் கும்மிகொட்டிப்
பாடிப் பரவசப் பட்டிடுவார் - தேடிவந்தே
ஆசிபெற்றுச் சென்றிடுவார் ஆனந்த மாய்க்கழிப்பார்
நேசிப்பார் அன்பில் நெகிழ்ந்து . 6.

உழவினைப் போற்றிடும் உன்னத நாளில்
பழந்தமிழர் வீரத்தின் பற்றும் - அழகாய்
வெளிப்படும் மஞ்சு விரட்டாக, பாரோர்
களிப்பினில் பூத்திடுவர் கண்டு . 7.

மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சளுடன் பொட்டிட்டு
தீட்டியகொம் பில்வர்ணம் தீட்டியதும் - சூட்டிய
மாலையுடன் கம்பீர மாய்க்கால் சலங்கையுடன்
வாலையு மாட்டும் மகிழ்ந்து . 8.

வண்டிகளில் பூட்டிய மாடுகளின் வீதியுலா
கண்கொள்ளா அற்புதக் காட்சியே !- பண்டைத்
தமிழரின்பண் பாட்டைத் தரணியில் காத்தே
இமிழ்தாய்த் தொடர்வோம் இனிது .9.

பேரின்ப மீந்திடும் பேறென எண்ணவைக்கும்
பாரினிலே மேன்மைமிகு பண்டிகையாம்!- பேரியலாய்ச்
சாந்தமுடன் நற்றமிழர் சங்கமித்துக் கொண்டாடும்
பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று . 10.

( அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-17, 7:45 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 126

மேலே