மூன்று வரங்கள்

அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது அந்த அரசு ஊழியர் முன் திடீரென்று ஒரு தேவதை தோன்றியது.

அந்தத் தேவதை வழக்கம்போல அவரிடம், “மூன்று வரங்கள் தருகிறேன், கேள்” என்றது.

அரசு ஊழியர் மகிழ்ச்சியோடு அந்தத் தேவதையைப் பார்த்து வணங்கினார்.

அவர் தேவதையிடம், “நான் பணக்காரனாக வேண்டும்” என்று தனது முதல் விருப்பத்தைச் சொன்னார்.

அடுத்த விநாடியே அவரைச் சுற்றிக் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் குவிந்து போய் விட்டன.

தேவதை, “அடுத்த வரத்தைக் கேள்” என்றது.

பணக்காரனாகி விட்ட அவர் தயங்கியபடி, “ஒரு அழகிய தீவில் பேரழகியோடு நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.

அடுத்த விநாடி, அவர் அழகிய இயற்கை அழகுடன் இருக்கும் தீவு ஒன்றில் பேரழகியோடு இருந்தார்.

தேவதை, மூன்றாவது வரத்தைக் கேள் என்று சொன்னது.

அவனும், “இனி நான் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று மூன்றாவது வரத்தைக் கேட்டான்.

என்ன ஆச்சரியம்! அடுத்து அவன் முன்பிருந்த அதே இடத்தில், அரசு ஊழியராக அமர்ந்திருந்தான்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (15-Jan-17, 10:50 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : moondru varangal
பார்வை : 723

மேலே