தை மகளே வருக

பிறந்திடுவாள் தைமகளும் மார்கழிக்குப் பின்னே
>>>பிரியமுடன் பொங்கலெனப் பூப்பாளே நன்றே !
சிறப்பான திருநாளில் தமிழர்தம் வீட்டில்
>>>சீர்மிகவே கொண்டாட வளமாகும் வாழ்வே !
உறவோடு சேர்ந்திருந்து கதிரவனைப் போற்றி
>>>உளமார உழவர்க்கு நன்றியினைச் சொல்லி
மறத்தமிழன் வீரமுடன் காளையினை வீழ்த்தி
>>>மனம்மகிழும் திருநாளே தைப்பொங்கல் நன்னாள் !!

செங்கதிரோன் கீழ்வானில் தலைதூக்கிப் பார்க்க
>>>செங்கரும்பின் தோகையொடு தோரணமும் ஆட
மங்களமாய்க் கோலமிட்ட முற்றத்தின் மீது
>>>மஞ்சளுடன் தாம்பூலம் பூக்களையும் தூவி
செங்கல்லில் அடுப்பமைத்து மண்பானை வைத்துத்
>>>திருவிளக்கை ஏற்றிவைத்தே ஆதவனை நோக்கிப்
பொங்குமுளத் தோடுதொழ புத்துணர்வும் கூடும்
>>>பொலிவான பண்டிகைநாள் பேரின்ப மீயும் !

புத்தரிசி பானையிலே பொங்குகின்ற நேரம்
>>>போடுகின்ற குலவையொலி காதோரம் கொஞ்சும்
தித்திக்கும் பொங்கலிலே நெய்மணமும் வீசும்
>>>திகட்டாமல் நெஞ்சள்ளும் அச்சுவெல்ல வாசம்
முத்தமிழும் கூடிவந்து நல்வாழ்த்துச் சொல்லும்
>>>முப்போதும் தமிழ்மரபே பண்பாட்டில் வெல்லும்
எத்திக்கில் இருந்தாலும் இதயமது பூக்கும்
>>>ஏற்றமுடன் கொண்டாட தைமகளே வாராய் !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Jan-17, 1:06 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 44

மேலே