கவியரங்கக் கவிதை

சோலைகவியரங்கம் - 4
8.கவிஞர் அழைப்பு சியாமளாராஜசேகர்
`````````````````````````````````````````````````````````````
பண்படுத்தும் பாஅவும் பாசமது கால்பிணைக்கும்
நன்முற்றித் தாள்பணியும் நாஅணும் - பெண்ணணங்கே.!
தூற்றும் பதர்நீக்கித் தூய்மைகொள்ளும் ஆமாம்நெல்
நாற்றும் சியாமளாதான் நாட்டு.

ஓயாத கடலலையாய் ஓங்குகவி எழுக
ஒப்பற்ற தமிழ்ப்பாட்டில் உம்குரலைத் தொழுக
தாயாகத் தமிழ்பரப்பும் தருநிழலே வருக
தயங்காத தீங்கவியைத் தமிழோடு தருக.!
பாயாத நதிபோலக் கலங்கிருக்கும் எமக்குப்
பனிமழையாய்ப் பூத்தூவும் கவிதாரும் எமக்கு
சேயாகக் காத்திருக்கும் சோலைகுழாம் விழிக்க
சியாமளாவே நீர்தாரும் செங்கவியில் களிக்க.!
-------/-------/--------/

சோலைக் கவியரங்கம் 4
******************
தலைப்பு : புதுமைப் பொங்கல் பொங்குக
*******************************************************
வாழ்த்து !
*************
தேனை விடவும் தித்திக்கும்
>>>>தெள்ளு தமிழில் துதிபாட
ஆனை முகனும் துணையிருப்பான்
>>>>அழகாய்க் கவிதை வரமளிப்பான் !
பானை வயிற்றோன் பதமலரைப்
>>>>பற்றி வணங்கப் பரிவுடனே
மோனை எதுகை தப்பாமல்
>>>>முதல்வன் காப்பான் முன்நின்றே !

பொங்கல் திருநாள் கவியரங்கைப்
>>>>பூத்துக் குலுங்கச் செய்திடவே
தங்கத் தமிழன் வள்ளிமுத்து
>>>>தலைமைப் பொறுப்பைத் தானேற்க
மங்காப் புகழைக் கொண்டிருக்கும்
>>>>வரத ராசன் சோலையிலே
சங்கத் தமிழே மணந்திடுவாய்
>>>>தரணி போற்ற வானுயர்ந்தே !

அறுசீர் விருத்தம் !
*************************
(மா மா காய் )
தமிழர் போற்றும் திருநாளாம்
****தையின் முதல்நாள் தரணியெங்கும்
அமிழ்தாம் தமிழின் இனிமையைப்போல்
****அகமும் முகமும் மலரட்டும் !
உமிக்குள் சிரிக்கும் நெல்மணிகள்
****உலகோர் வீட்டில் நிரம்பட்டும் !
இமியும் பேத மில்லாமல்
****இனிதே மனிதம் தழைக்கட்டும் !
கவலை தீயில் பொசுங்கிவிடக்
****களிப்பால் இதயம் ஒளிரட்டும் !
சுவடாய்ப் பதிந்த துயர்யாவும்
****தொலைந்து தோற்றே ஓடட்டும் !
துவண்ட மனமும் அமைதியுற்றுத்
****துரிய நிலையை அடையட்டும் !
சிவத்தை வெளியில் தேடாமல்
****தெளிந்து தனக்குள் காணட்டும் !

உழவர் வாழ்வின் தரமுயர்ந்தே
****உவகை பெருகி மேன்மையுறக்
கழனி யெங்கும் பயிர்செழித்துக்
****கவினாய்ப் பசுமைப் பூக்கட்டும் !
இழந்த மகிழ்ச்சி மீண்டுவர
****இறைவன் அருளும் கிட்டட்டும் !
சுழலும் வாழ்க்கைப் பாதையிலே
****சுகமாய்ப் பயணம் தொடரட்டும் !

பதுக்கி வைத்த பணமெல்லாம்
****பைய வெளியில் வந்திடட்டும் !
மதுவை விலக்கி மனைவியுடன்
****மனிதன் பொழுதைக் கழிக்கட்டும் !
வதுவைக் கூடிக் கன்னியரின்
****வாழ்வும் வரமாய் விளங்கட்டும் !
புதுமைப் பொங்கல் பொங்கட்டும்
****புவனம் பொலிவாய் மலரட்டும் !

கவிஞர் சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Jan-17, 11:26 pm)
பார்வை : 160

மேலே