கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது

கொங்கு நாட்டில்,'ழ'கர உச்சரிப்பை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)
2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்
3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)
4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]
5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும்.
6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)
7. என்றது - என்னுடையது.
8. உன்றது - உன்னுடையது.
9. அப்பச்சி- தாய்வழி தாத்தா
10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.
11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி
12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி
13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)
14. நடவை - வெளிப்புறக் கதவு
15. வட்டல்- தட்டு
16. நருவசா- முழுவதுமாக
17. சோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன சோலி உனக்கு?)
18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)
19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)
20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)
22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)
23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)
24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)
25. அவத்தைக்கு - அங்கே
26. இவத்தைக்கு - இங்கே
27. சலவாதி - மலம்.
28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)
29. போசி- பாத்திரம்
30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)
31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)
32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்
33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)
34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)
35. வாத்துக்கோ - ஊற்றிக்கொள்ளுதல். ( தண்ணி வாத்துக்கோ- குளிச்சுக்கோ)
36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)
37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)
38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை
பொக்குன்னு போயிடும்)
39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)
40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.
41. சீவக்கட்டை- விளக்குமாறு
42. கூமாச்சி- கூர்மையாக
43. தொறப்பு - பூட்டு
44. தொறப்புக் குச்சி - சாவி
45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Jan-17, 9:46 am)
பார்வை : 201

மேலே