உன்நினைப்பில் பூத்தொடுத்தேன் - காதல் கவிதை - மரபு பாடல்

உன்நினைப்பில் பூத்தொடுத்தேன்
------ உள்ளமெனும் நார்கொண்டு
என்னவனே அறியாயோ
------- எம்மருங்கும் உன்நினைவே !
பன்மொழிகள் பேசுகின்றாய்
------ பாசத்தோடு என்னிடமே
பின்னழகை ரசிக்கின்றாய்
------ பேசிடுமா என்னிதயம் !


கண்களினால் அழைக்கின்றேன்
------ கால்கொலுசும் தாளமிடப்
பெண்களிலே சிறந்தவள்நான்
------ பெண்களுமே காதலிப்பர்
விண்மீனின் எழிலுருவம்
------ விரைந்துவாராய் பூச்சூட்ட .
வண்ணமிகு இதயத்தினால்
------ வந்திடுவாய் என்னருகே !


கனிபோன்ற சுவையுடனே
------ கன்னிநானும் காத்திருக்கப்
பனிமலர்கள் மலர்கின்ற
------ பசுமைமிகு வேளையிலே
நனியழகு நடையழகில்
------ நளினமுடன் நானிருக்க
இனியாவும் நற்காலம்
------ இணைந்திடுவோம் என்னவனே !



பூச்சரத்தை நான்தொடுக்க
------ புவிதனிலே நீமகிழ
பாச்சரத்தால் பாடிடுவேன்
------ பண்புடனே கண்ணியமே
மாச்சரத்தால் தோரணங்கள்
------ மங்கலமாய்க் கட்டிடுவேன்
வீச்சுகளின் இமைகளிலே
------ வீழ்ந்திடுவாய் என்னவனே !


உணர்வுகளின் நீட்சியினால்
------ உண்மையானக் காதலினால்
புணர்தலுமே நன்றாகும்
------ புன்னகையின் பூவன்றோ ?
மணம்வீசும் பூச்சரத்தை
------ மாலையாகத் தொடுக்கின்றேன்
குணமுடைய மங்கைநானும்
------- குலமகளாய் உன்நினைவே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 12:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே