காற்றலையில் பாசவலை
முகநூலால் முத்தான அலையெனும் பசுமை
முகிழ்த்தது மனதில் முல்லைப் பூக்களாய்...
இணையத்தில் மலர்ந்த கவிதையின் வாசனையில்
இதயத்தில் அமர்ந்தது பாசமிகு தேனீக்களாய்......
முகில்கள் திரையிட்டும் ஒளிர்விடும் நிலவாய்
முகங்கள் அறியாது துளிர்விடும் உறவுகள்...
புல்லின் நுனியுறங்கும் வெள்ளிப் பனியின்
புன்னகையாய் விரிந்திடும் அன்பின் சிறகுகள்......
கனவுகளைச் சுமந்திடும் விழிகளின் பார்வைக்கு
கலங்கரை விளக்காய் வழிகள் காட்டியும்
கற்பனைத் திறனை அழகாய் மெருகேற்றியும்
கருணை நிறைந்து உதவிடும் நேசங்கள்......
கவியில் விழுந்திடும் கற்களைத் தகர்த்து
கவின் தோற்றத்தைக் காண வைத்து
மொழியின் உளியால் நாளுமெனைச் செதுக்கி
செழிப்பாக வளர்த்திடும் தமிழின் சிற்பிகள்......
காற்றின் அலையில் பாசத்தின் வலையில்
நிழல்களாய்த் தொடர்ந்து நிசங்களில் வாழ்ந்து
நெஞ்சத்தின் தாழ்கள் திறந்து அகத்தினால்
பேசுமன்பு இதுவே எம் நட்புலகு......