உன் நினைப்பில் பூத்தொடுத்தேன்

கதிர் விழுந்து மலரும் கமலமாய்
மதி பறிக்கும் உந்தன் வதனம்
சுதிகள் சேர்ந்து பாடும் கானமாய்
உதிரும் மொழிகள் மனம் மயக்கும்......

வலிமை கொண்ட தாழை மடல்களில்
மெலிந்த வாழைப்பூ விஞ்சும் விரல்கள்
அலர்ந்தப் பூக்களின் அகத்தினைக் கொய்திடும்
மலர் கணைகள் வீசுமந்தப் பார்வைகள்......

வெள்ளி நிலவாய் ஒளிரும் நேசத்தில்
உள்ளம் அதனை உன்னில் தொலைத்தேன்
துள்ளி குதிக்கும் புள்ளி மானாய்
தள்ளாடி காதல் காட்டில் விழுந்தேன்......

பனித்துளியாய் நீயன்று மறைந்து விட்டதால்
பனிக்கட்டியாய் நெஞ்சம் உறைந்து விட்டேன்
மூச்சுக் காற்றாய் உனையே சுவாசித்து
ஈச்சமர ஓலையென உடல் சிறுத்தேன்......

சன்னல் வரும் தென்றலின் தீண்டலில்
என் மேனியில் காயம்பட கண்டேன்
மின்னற் பொழுதையும் யுகமாய் கடந்து
உன் நினைவில் நாட்களைப் பூத்தொடுத்தேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 1:48 pm)
பார்வை : 109

மேலே