கருவாச்சியின் காதல்

கருவாச்சியின் காதலிலே கண்மயங்கிக் கிடக்கின்றேன்.
திருவாய்மொழி திறந்திடுவாய் தித்திக்கும் உன்னிதழ்கள் !
வருவாயோ என்னருகில் வாசமலர் சூடிக்கொண்டே.
பருவமகள் கருப்பழகி ! பழகிடவேன் நிலைதானே !!


நிலையில்லா உலகினிலே நிலைத்திடுமா உணர்வுகளும்.
மலைமலையாய் உன்நினைவு மறந்திடுமா என்னுள்ளம்.
களையிழந்த மதிமுகத்தாள் கண்களிலே கண்ணீரே !
சிலையாகி நின்றுவிட்டேன் சித்திரமே பாராயோ !


பாராயோ நீஎன்னை பார்த்துவிடும் தூரத்தில்
வாராயோ தேனிசையே வந்தருகே நில்லாயோ
சேராயோ என்னோடு சேர்ந்துவிடும் நாளருகில்
சீரான செவ்விதழால் சிந்துகின்றாய் சிரிப்பொலியை . !!


சிரிப்பொலியை நான்கேட்டு சிந்தையும் மயங்கி
உரித்தாக்கும் மோனநிலை உணர்வாயோ எனதழகே !
விரிவாக்கும் தனைநோக்கி விரைந்திடுமே காதல்தீ
பரிதாபம் வேண்டாமே பாசத்தால் காண்பாயே ! !



தெள்ளமுதே தேனே பாலே தெவிட்டாத மானே
உள்ளமுத வார்த்தையிலே உண்மையிலே சொக்கி
கள்ளமிலா நேசத்தோடு காசினில் வாழ்ந்திடவே
வெள்ளை மனத்தால் வேண்டுகின்றேன் கருவாச்சி !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Jan-17, 8:33 pm)
பார்வை : 407

மேலே