கறை படிந்த காக்கிகள்

அறவழிப் போராட்டித்தின் விதி நல்லவர்களின்
ரத்தத்தால் நிலத்தை
நனைப்பதுதான் போல

ஆம் !
காந்தியில் தொடங்கி
மெரினாவரை தொடர்கிறது !

கடமை,கண்ணியம்,
கட்டுப்பாடு இன்று
தமிழ்நாட்டில் கடும்
தட்டுப்பாடு !

அறவழி பண்பாளர்களை
பொறுக்கி என்றவனை
தண்டிக்க துப்பில்லாதவர்கள் !

இரவும் ,பகலும் பெண்களை
இமைபோல் காத்தவர்களை
இலவச காமம் கிடைத்தால் இது சாத்தியமென்று எகத்தாளம் செய்தவரின்
நாவை அடக்க அருகதை
அற்றவர்கள் !

காக்கி சட்டைக்குள்
கல் நெஞ்சம் கொண்டவர்கள் !

இரக்கம் எள் அளவும்
இல்லாமல் ஈனச்செயல்
புரிந்தார்கள் !

ஆட்சியாளர்களின்
அதிகாரத்திற்கு
ஏவல் புரிந்தார்கள் !

ஒன்று மட்டும்
மறந்துவிட வேண்டாம் !

காலம் கண்டிப்பாக
பதில் சொல்லும் !

இத்தனையும் செய்துவிட்டு
உறுத்தல் இல்லாமல்
உங்களால் உறங்க முடியுமா ?

இரத்தவாடை உங்கள்
சுவாசத்தை சிதைக்காதா ?

தமிழ் உறவுகளின் ஓலம்
உறக்கத்தில் ஒலிக்காதா ?

காவல்துறை மக்களின்
நண்பனென்று இனிமேலும்
சொல்லாதீர்கள் !

உங்கள் வீரம் ஆண்மையுடையதென்றால்

ஊழல் செய்தவரையெல்லாம்
உடனே உள்ளே தள்ளுங்கள் !

எங்கே உறைபனியில்
இராணுவத்தோடு
எல்லையில் எதிரியிடம்
ஒருநாள் போராடிவிட்டு
உயிருடன் வாருங்கள் பார்க்கலாம் !

திருப்பி அடிக்க
திராணியற்றவர்களிடம்
மட்டுமே திறமயாக
வேலை செய்யும்
உங்கள் சட்டமும்,வீரமும் !

தவறு செய்பவர் யாராயிருந்தாலும்
தண்டியுங்கள் பார்க்கலாம் !

பள்ளிப் பிள்ளைகளை
பழிவாங்குவது
உங்கள் பதவிக்கு அழகல்ல !

வேலியே பயிரை மேய்வதானால்
சட்டப் புத்தகங்களை
முதலில் குழிதோண்டி
புதையுங்கள் !

காட்டுமிராண்டிகளாகவே
காலம் தள்ளுவோம் !

மீண்டுமொருமுறை
தமிழினம் கற்காலத்திலிருந்து
தொடங்கட்டும் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (23-Jan-17, 11:17 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 93

மேலே