பண்பாடு

திருமண மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் “வாங்க சார்..” என்று வரவேற்ற வேலு வின் மகனைப் பார்த்து லேசாய் எரிச்சலடைந்தேன்.

பதினாறு வயதிருக்கும். அவன் மட்டும் தனியே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தான். அருகில் பெரிய மனிதர்கள் யாருமில்லை.

‘வர்றவங்கள வாசல்ல நின்னு வரவேற்கணும்கிற பண்பு தெரியாம என்ன விசேஷம் நடத்துறாங்க... சின்ன பையனை நிறுத்தியிருக்கிறாங்களே’ என்று நினைத்துக் கொண்டேன்.

“அப்பா எங்கேப்பா..?’’ வேலுவின் மகன் சுரேஷிடம் கேட்டேன்.

“சாப்பாட்டு கூடத்துல நிக்கிறாங்க சார்’’ என்றான்.

மேடையில் இருந்த புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வேலுவைத் தேடி சாப்பாட்டு கூடத்துக்கு போனேன். என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்த வேலு, கையைப் பிடித்து அழைத்துப் போய் உபசரித்தார். சாப்பிட்டு முடிந்ததும் அவரிடம் கேட்டேன் “நீங்க வாசல்ல நின்னு வரவேற்க வேண்டாமா?”

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வீட்டுக்கு வர்றவங்கள எப்படி வரவேற்கிறது; எப்படி உபசரிக்கிறதுன்னு தெரிய மாட்டேங்குது. என் மகன் அப்படி இருக்கக் கூடாது. வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட்டு உபசரிக்கிற பண்பாடு அவனுக்கு வரணும். அதனாலதான் அவன அங்க நிறுத்தி வைச்சிருக்கேன். எனக்கு அப்புறம் எனது உறவுகளையும் நண்பர்களையும் போற்ற வேண்டியது அவன்தானே சார். அதனால தான் கல்யாண பத்திரிகை கொடுக்கப் போறப்பவே அவனயும் எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போனேன்.

கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் நிச்சயம் என்னைய பாக்காம போக மாட்டாங்க. அதே மாதிரி அவனும் எல்லாரையும் நிச்சயம் பாக்கணும். அதனால தான் அவன அங்க நிறுத்திட்டு நான் இங்க நிக்கிறேன்” என்று வேலு சொல்ல.. அவரிடமிருந்து புதிய விஷயம் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Feb-17, 8:45 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : panpadu
பார்வை : 443

மேலே