வேலன்டைன் டே

"வேலன்டைன் டே"
======================================ருத்ரா இ பரமசிவன்

இன்று கண்டிப்பாய் அஞ்சலில்
அனுப்பி விட வேண்டும்.
என் இதயம் பதிப்பித்த
"பொன்" அட்டையை
"என் உயிருக்கு" என்று
சொல்வெட்டு செதுக்கி
அவளுக்கு அனுப்பி விடவேண்டும்.
அஞ்சல் அலுவலகத்தில்
அனுமார்வால் கியூவில் நின்று
அசோகவனத்து என் சீதைக்கு
ஒரு வழியாய்
இதை அனுப்பியாகி விட்டது.
வீடு எனும் சிறைக்குள்
இருக்கும் "என்" இதயத்துக்குள்
என் இதயம் பதியம்
செய்யப்பட்டு விடவேண்டும்!
யார்கையிலும் கொடுக்காமல்
அவளிடமே மற்றவர் அறியாமல்
கொடுக்க‌
அஞ்சல் சேவக நண்பரிடம்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவள் துடிப்புகளும்
அதே நேரத்தில்
எனக்கு அந்த "பொன் தருணங்களில்"
வைரத்துளிகளாய்
கிடைக்கவேண்டும் என்று
வாசலில்
அஞ்சல் நண்பரின் வருகைக்கு
காத்துக்கொண்டிருக்கிறேன்.
நேரம்
கழுமரம் போல்
என் உள்ளத்தைக் குத்தி
ஊடுருவியது...
சதை பிதுங்கியது போல்
என் சரித்திரக்கனவுகள்
நீண்ட காலம் எனும் குடல்களாய்
சரியக்காத்துக்கிடக்கின்றேன்.
......
.......

"வாடா! போகலாம்!
தாமதம் ஆனால் அவர் அப்பாயின்ட்மெண்டை
மிஸ் பண்ணிடுவோம். புறப்படு"

அப்பா அழைத்தார்!
என் இதய வால்வுகளில் ஓட்டையாம்!
அறுவை சிகிச்சைக்கு
அழைக்கிறார்.

என் இதயத்தை ஓட்டை போட‌
அந்த வைர நிலவு
"க்ளுக்" என்று சிரிக்கிறாள்.
டாக்டர் கையில் கத்தி!
"ஆட்டுக்குட்டியாய்"
பின் தொடர்கிறேன்!

==================================================

எழுதியவர் : ruthraa (14-Feb-17, 6:59 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 84

மேலே