நாற்காலிக் கனவுகள் ​

​மனிதனாய் பிறந்தால்
மலைப்போல ஆசைகள் !
மண்ணிலும் விண்ணிலும்
செல்வங்கள் குவித்திடும்
நிறைவேறாக் கனவுகள் !

நேர்வழியில் பயணித்து
ஈட்டிடும் எண்ணமின்றி
தவறான பாதையிலே
சேர்த்திடும் வழிதேடி
மாற்று முறைகளையே
பின்பற்றும் உள்ளங்கள் !

நிரந்தரமிலா வாழ்வில்தான்
நித்தமும் கொண்டாடும்
நீட்சியாய் விருப்பங்கள்
ஆட்சியைப் பிடித்திட
துடித்திடும் கட்சிகளாய் !
அன்றாடம் நடந்தேறும்
அரசியல் நிகழ்வுகளும்
அதற்கான அத்தாட்சி
அவலமாய் அரங்கேறுது
வரலாற்றுப் பதிவுகளாய் !

அதிகாரத்தைக் கைப்பற்ற
சதித்திட்டம் திரைமறைவில்
நொடிக்கொன்று நடக்குது !
வளைந்திடும் நெஞ்சங்கள்
களைகிறது தன்மானத்தை
இழக்கிறது சுயமரியாதை
வெறிபிடித்து ஆடுகிறது
ஒலிப்பெருக்கி இரைகிறது
ஆட்சியில் அமர்ந்திடும்
நாற்காலிக் கனவுகள் ....

​​
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-17, 9:40 pm)
பார்வை : 381

மேலே