நினைவுகள்

என்னவளுக்கு மிகவும் பிடித்த எழில் நிறைந்த மல்லிச்செடியை
எதிராளிவீட்டில் பதியம்போட்டு என்வீட்டில் நட்டுவைத்தேன்...

மொட்டுவிட்ட மல்லிச்செடியோ மெட்டுகட்டி நடனமாட
தொட்டுவிட்ட அவள்மனதில் பட்டுப்போன என்காதலை எப்படிக் கூறுவேன்...?

கட்டிக்கொண்ட மன்னனிடம் அவள் தஞ்சம் புகுந்துவிட்டாள்
வெட்டிக்கொண்ட காதலில் அவள் நஞ்சைக் கலந்துவிட்டாள் எனக் கூறிடவா...?

காத்திருந்து அவள் முகத்தை கடைசிவரை பாராமல்
கலங்கப்பட்ட என்மனதை கண்ணீரில் மூழ்கடித்த கதைகளைத்தான் சொல்லிவிடவா...?

முற்றத்தில் மொட்டுவிட்ட மல்லிகையின் நறுமணமோ
என் சிந்தையினைச் சிதைத்து அவள்சிரிப்பினையே நினைவூட்ட...

எப்படிச் சொல்வேன் மல்லிச்செடியிடம்..
ஏமாற்றப்பட்ட என்காதலை அவள் எட்டடி குழிதோண்டி புதைத்த கதையை...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-Feb-17, 7:02 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : ninaivukal
பார்வை : 259

மேலே