இதழ்கள் பேசவில்லை

இதழ்கள் பேசவில்லை
=======================

ஓடிக்கொண்டிருக்கும் கதையில்
இதழ்கள் பேசவேண்டாம்
கதவைத்தட்டும் கைகள்
ஆக்கிரமிக்குமோ என்ற ஒழுகலும்
கதவைத் திறந்தால்
கண்கள் எதை நோக்குமோ என்ற வழுவலும்
மினுக்கமான துளிகளை
முகத்தில் விதைத்தாற்போல் பருவமும்
மென்மையான
சணல் போன்று கனத்த பின்னலுடைய கூந்தலும்
நாகம் படம் பிடித்துபோல் நிற்கும்
அளவுடைய கழுத்தும்
காரணமே இல்லைதான் என்றாலும்
காரணம் தேடி
கரணமடிக்கும் நாவுதனிற்கு
இங்கீதம் மறக்கும்
விழிமணிகளில் சந்தேகம் சுமந்திலை
என்றாற்தான் வியப்பு
நூறுமுறை கண்டிருக்கக் கூடும் சுந்தரம்
இதழ்கள் திறப்பது
பேச இல்லை என்பதைக்கூட
இத்தனை ரசனையோடு செய்யமுடியுமா
பயண நித்தியம்
சாத்தியமில்லைதான்
எதுவரை என்றில்லை, எப்படிக் கேட்பது ம்ம்
எதுவரையோ அதுவரை
இனி இப்படித்தானோ இந்த மௌனம்
இளமைக்கு மரணம்
நவீனமாய் இருப்பதைப்போலாகியதே
யாரிடமும்
சொல்லலாமா வேண்டாமா என்ற
அசம்பாவிதமான
விபத்தொன்றை
இப்படியா நேரிடச் செய்வது
முட்டிமேல்
இதிகாசத்தை திறந்து வைத்துக்கொண்டு
அசைவிருக்கும்
பூக்களையா வாசிக்கிறேன்
இடம் மாறும் சொற்களை வைத்துக்கொண்டு
என்னதான் கேட்கலாம்
படுக்கையில் ஒருபுறமாய் சாய்ந்துவிட்டு
கோலம் அல்லவா
நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்
உன் ஆடையின் அசவுகரிய சூழ்நிலைக்கு
என் போர்வை விலக்கு
நாகரீகமானபோது
எனக்குள் இருந்த நல்லப்பிள்ளையை
அங்கெங்கேயாவது
தொலைத்துவிடலாமா சுயநலம் ம்ம்
ஏதோ உடைந்துகொண்டிருக்கும் கிலேசம்
அதுவரை
தவறென்றதெல்லாம்
இப்படி ஒரு காட்சிக்கு முன்னால்
ஏதும் தவறில்லை என்ற சுவர்தான் அது
பறக்க எழும் கைகளால்
புத்தகத்தை இறுகப் பற்றிவிடுவேன்
எழ எத்தனிக்கும் கால்களை
நிலத்தில் அமிழ்த்திக்கொள்வேன்
நிச்சலனம் ஏற்ற
பறிதலையும்
நிற்காமல் துடிக்கும் உதடுகளையும்
என்ன செய்வது
அடுத்துடையவளின் நிமித்தங்கள் பருகும்
ஆக்சிஜன் ஆகியிருக்கலாம்
ம்ம் மழையால்
மூடிக்கிடக்கும் ஜன்னலில் அறையும்
நீர்த்திவலையின் நிலைதான்
ஏது கடற்கரையில் இல்லாத அலைவீச்சுகளும்
ஏது பூக்களும் நறும்பாத
சுகந்தமும்
ஏது பிரபஞ்சமும் நிகழ்த்தாத பூகம்பமும்
ஏது நதிவிளிம்பில் இல்லாத
அமைதியும்
ஏது வானில் பறக்காத வானம்பாடிகளும்
யாரும் உணராத அகவரை உடைய மோகாந்தமுமாய்
பிரிகையில்
நெஞ்சாம் பாறைக்கு நடுவே
பிளவு செய்த
பார்வைகளுமாய்
ஒருமுறைத் திரும்பிப் பார்த்தால் தான் என்ன என்றால்
ஓரோரு முறையும்
திரும்பிப் பார்க்க நேரிடும் இடர் வருமே
ஏக்கங்களுடனே
இனி இதழ்கள் பேசவேண்டாம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (17-Feb-17, 7:11 am)
Tanglish : ithalkal pEsavillai
பார்வை : 352

மேலே