ஒருமுறை சொல்லிவிடு

பெண்ணே !
எங்கே தேக்கி வைத்திருக்கிறாய்
எனக்கான உன் காதலை ...?

உன் வரவு தந்தது
உறவு மட்டுமல்ல
வாழ்வின் வசந்தம்
நோக்கி பறந்திடும்
சிறகுகளும்தான் !

கரைதொட முயலும் இடைவிடா அலைகள் போல
நானும் எத்தனிக்கிறேன்
என் காதலுக்கான
உன் ஒப்புதலைப் பெற !

நெருங்க,நெருங்க
விலகிச் செல்லும்
மேகம் போல நீயும்
வேகமாய் விலகிச் செல்கிறாய் ...!

விடை காணமுடியா
விடுகதையாய் நீ !

காத்திருப்பதும்,
காக்க வைப்பதும்
காதலில் சுகமாயிருக்கலாம் !

ஆனால் நீ காக்க
வைக்கிறாயா,
காலம் கடத்துகிறாயா
புரியவில்லை !

நெருங்கி வருவாயா
நிராகரிப்பாயா ?
நிதர்சனம் சுடுகிறது !

திரை விலக்கிப்பார்
இணையத்தில் நடக்கிறது
இதயப் பரிமாற்றங்கள் !
நீ இன்னும்
புறாவின் கால்களில்
கட்டிய கடிதத்துக்காகவா
காத்திருக்கிறாய் ?

எது எப்படியோ
மூடிய விழிகளுக்க்குள்
காதல் வெளிச்சம்
காட்டியவள் நீ !

என் கையகல
இதயத்தில்
கடல் ஆழம்
காட்டியவள் நீ !

என் நூலிழை
சுவாசத்தில் நுழைந்து
பிரபஞ்ச பிரம்மாண்டம்
காட்டினாய் நீ !

காமத்தின் கசடுகள்
களைந்து காதலின்
சுடரேற்றினாய் நீ !

உன்னை விட்டு
இன்னொருத்தி
சத்தியமாய் சாத்தியமில்லை !

உன் மறுப்பு எனக்கு
மரணத்தின் வாசல் திறப்பு !

உன்னை வரவேற்க
அணிவகுத்து காத்திருக்கின்றன
காதலுடன் என்
என் கவிதைகள் !

ஆம் ! உன் சாதகமான
பதிலுக்காய் காதலுடன்
காத்திருக்கிறது
இந்த சாதகப் பறவை .....!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (19-Feb-17, 9:20 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 205

மேலே