விண்ணைதான்டி வருவாயா

எந்தன் விழியோரம்
தேக்கிவைத்த
ஓராயிரம் கவிதைகளை
வாசிக்க - உன் விழி தேவையடி
இந்த ஒருதலைக்காதலனுக்கு ...

காதல் கடலில் மூழ்கி
தத்தளிக்கும் என்னை
உந்தன் ஒரு வார்த்தை
கரை சேர்த்துவிடாதா???

என்னை உரசி உரசியே
உயிர் கொடுக்கும் உந்தன்
ஓரப்பார்வையை கணக்கெடுக்காமல்
பத்திரபடுத்தும்
என் இதயத்தின் துடிப்பே
நீதானடி ...

உன் கூந்தலிலிருந்து
தற்கொலை செய்யும்
ஓர் முடியும்,
காதோடு கதை பேசி ஓய்ந்து போன
ஒற்றை ரோஜாவும்
எந்தன் புதையல் சேமிப்பை
நீட்டிக்கொண்டே போவதை
நீ அறிவாயா???

என் காதல் உலகில்,
பகலில் தெரியும்
நட்சத்திரமெல்லாம்
என்னை பார்த்து கண்ணடிக்க,
இரவில் உதிக்கும் சூரியன்
என்னை மட்டும் சுடுகிறான்...

அந்த கடிக்காரகாரன்கூட
நிமிஷத்தை வருஷமாய் மாற்றி
வெறுப்பேற்றுகிறான்...

என்றைக்குதான் இந்த
பெண் நிலாவின்
காதலில் இதமாக குளிர்காய்வேனோ ???
என்ற கேள்விகுறியுடனே
நடமாடுகிறேன் நான்...

என் தூக்கமெல்லாம்
தூக்கிலிடபட்டு நனவுலகத்திலே
நான் கனவு காண்கிறேன்,
உன் விரல் கோர்த்து
உலகை வளைத்து
கடலை பெயர்த்து
புது இடத்தை கண்டறிந்து நாம் குடிபோக...

அந்த கனவும் உயிர்பெறும் நிலை
உன் மௌன விரதம்
கலையும் தருவாயில்தான்...

உன் பின்னாடியே நடைபழகி
ஓய்வில்லாத என் பாதங்கள்
மீண்டும் மீண்டும்
உன் வீட்டு வாசலிலே
கோலமிடுகிறதே....

மூடபட்ட உன் இதயகதவுகளின் மேல்
எந்தன் காதல் பார்வை தட்ட தட்ட
ஏனடி திறக்க மறுக்கிறாய்???
ஒருமுறை
ஒரேமுறை
அதை மெல்ல திறந்துபாரேன்
ஒரு ஓரத்தில்
குடிசையாவது போட்டு குடியிருப்பேன்...நான்

உந்தன் கன்னகுழியில்
புதைந்து...
மைதீட்டிய விழியில்
கரைந்து...
நீ விரித்த காதல் வலையில்
விழுந்து...
எழ விரும்பாமல்
உந்தன் கொலுசொலியையே
என் இதய துடிப்பாக
மாற்றியிருக்கும்
என்மீதும் என் காதல்மீதும்
தயவுசெய்து ஆராய்ச்சி மட்டும்
நடத்திவிடாதே பெண்ணே!!!

எந்தன் காதலை
திறந்துகாட்டவும்,
பிளந்துகாட்டவும்
அளந்துகாட்டவும் முடியாது தான்
ஆனால்,
அதையெல்லாம் உன்னை மணந்து மொத்தமாய் காட்டுவேனடி...

உன் கண்களில் நான் தெரிகிறேன்
கண்ணீரிலும் வாழ்கிறேன்
உன் உயிரில் வளையவருகிறேன்
உயிரணுக்களில் எல்லாம் சிரிக்கிறேன்
என்பது நான் அறிந்ததே!!!

நீ இல்லவே இல்லை என்று
ஆயிரம் முறை மறுத்தாலும்
உந்தன் விழியோர கண்ணீர்துளி நடிக்க விரும்பாமல்
காட்டி கொடுத்துவிட்டதடி...

எனக்கான காதல் வார்த்தைகள் வந்து விழாதா என்று
உந்தன் வாயையே
வேடிக்கை பார்க்கிறேன்...

எதிர்பார்ப்புகளை
தேக்கிவைத்து
ஏங்கி தவிக்கிறேன்
தடைகளுக்கிடையில்
நம் காதல் மாட்டி
தவிக்கிறதென்றால்
எல்லா தடைகளையும்
உடைத்தெரிந்து
அந்த
விண்ணையும் தாண்டி
எனக்காக வருவாயா???


@ஸ்ரீதேவி@

எழுதியவர் : ஸ்ரீதேவி (19-Feb-17, 10:16 pm)
பார்வை : 512

மேலே