வெண்பாக் கொத்து

வெண்பாக் கொத்து
`````````````````````````````````
குறள் வெண்பா
```````````````
கண்ணன் வடிவினைக் கண்ட விழிகளில்
கண்ணீர் பெருகிடும் காண்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
````````````````````````````````
கண்ணன் குழலூதக் கன்றுடன் மாடுகளும்
பண்ணை மிகரசித்துப் பாலைச் சொரிந்தபடி
கண்மூடிக் கேட்டிடும் காண் .

நேரிசைச் சிந்தியல் வெண்பா
````````````````````````````````
கண்ணன் வரவிற்குக் காத்திருக்கும் கோபியர்
எண்ணம் முழுதும் இனித்திருப்பான் - ஒண்டொடியாள்
கண்களில் காதலைக் காண் .
இன்னிசை வெண்பா
```````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் நெக்குருகி
வண்ணமலர் சூடிய வஞ்சியவள் வாய்திறந்து
கண்ணா வெனவழைப்பாள் காண் .

நேரிசை வெண்பா
```````````````````````````
கண்ணன் கவர்ந்தான் கருமை நிறத்தினால்
வண்ணக் கனவில் வளையவந்தான் ! - புண்ணான
உள்ளத்தைத் தேற்றி உவகை யளித்திடும்
கள்ளமிலாக் கண்ணனைக் காண் .

இன்னிசைப் பஃறொடை வெண்பா
``````````````````````````````````````````````````
கண்ணன் வரவுக்காய்க் கன்னிமனம் காத்திருக்கத்
தண்டை யொலிகொஞ்சத் தண்ணளி சிந்திடப்
புல்லாங் குழலூதிப் பூரிக்கச் செய்பவன்
முல்லைச் சிரிப்போடு முத்தாய் ஒளிர்பவளின்
பின்னல் சடையைப் பிடித்திழுத்து வம்புசெயும்
கன்னல் குறும்பினைக் காண் .

நேரிசைப் பஃறொடை வெண்பா
```````````````````````````````````````````````
கண்ணன் புரிந்திடும் கள்ளத் தனத்தினை
எண்ண உளம்பூக்கும் இன்பத்தில் !- வெண்ணையை
உண்டதும் ஓடி ஒளிந்திடுவான்! அன்னையைக்
கண்டதும்வாய் பொத்துவான் கைகளால் !- கண்மணியே
மண்ணைத்தின் றாயா மகனே எனக்கேட்டால்
கண்ணனவன் வாய்பிளப்பான் காண்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Feb-17, 12:42 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 57

மேலே