தூது போ செல்லக்கிளியே

கோடிகளும் கோடிகளும் கூடுகின்ற சூதாட்டக்
கும்பலுக்குள் மாட்டியுள்ள நாட்டை – மீட்டு
வாடிவிட்ட மக்கள்மன வாட்டத்தைப் போக்கஎமன்
வரவுக்குத் தூதுபோ செல்லக் கிளியே!

ஐந்தறிவு எமக்கிருந்தும் ஆறறிவாய் நடத்துகின்ற
அரசியலின் தில்லுமுல்லு அறிந்தோம். – இந்த
ஜந்துக்களின் கடிகொண்ட சங்கடத்தை அடித்தோட்ட
சாட்டைவர தூதுபோ செல்லக் கிளியே!

ஊர்பணத்தைக் கொள்ளையிட்டு ஊளையிடும் நரிகளெலாம்
உலகைவிட்டு ஓடிவிட வென்ற மக்கள்
தீர்மானம் தனையெடுத்து திக்கெட்டும் நீபறந்து
திமிரடக்கத் தூதுபோ செல்லக் கிளியே!

வாக்களிப்பு என்பதெல்லாம் வாக்காளன் கைகொண்ட
வாய்க்கரிசி எனவாக என்றோ எம்மை
ஏய்க்கின்ற பேர்களுக்கு இட்டதுவாய் இருக்கட்டும்
எமனிடம்நீ தூதுபோ செல்லக் கிளியே!

ஆண்டவனாய் இருப்பதற்கே ஆசைவைக்கும் பேர்களெலாம்
அடங்கட்டும் என்பதற்கு படைத்த அந்த
ஆண்டவனின் தீர்ப்பாக அமையட்டும் என்பதற்கே
அறம்காக்க தூதுபோ செல்லக் கிளியே!
*மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Feb-17, 2:10 am)
பார்வை : 210

மேலே