காதலின் நினைவில்

பூவோடு பூத்திருக்கும் பூவையிவள் தனிமையில்
மனதோடு தினம் பேசியே சிரிக்கிறாள்
மலரோடு உள்ளுறங்கும் சுவைமிகு தேனாக
நினைவு அலைகளை உளத்தால் சுவைக்கிறாள்......


சிற்றிதழ்கள் திறந்து மொழிகள் பிறந்தால்
வீணையின் நரம்புகள் சுருதி மறக்கும்
சோலைக் குயிலும் தோல்வியில் பறக்கும்
இன்றோ மௌனத்தின் மடியில் புதைகிறாள்......


புதுமணம் வீசுகின்ற நீள்குழலில் குடியேறாது
வண்ணப் பூக்கள் வாசலில் மலர்ந்தே
வெயிலில் விழுந்து புழுதியும் படிந்து
கருகும் மலராய் மாதிவளும் நிற்கிறாள்......


உற்றவன் மார்பினில் உறங்கிய நொடிகள்
நெஞ்சுக்குள் குளிரேறி நெற்றியில் நீர்வடியும்
வேதனைத் தீயின்று உள்ளுக்குள் எரிந்திட
மேனியும் விழியும் சேர்ந்தே நீராடுகிறாள்......


ஓடும் குருதியை மையாய் ஊற்றியிங்கு
வலிகளை வரிகளாக்கி இமையால் கவியெழுதி
காற்றின் கைகளில் கொடுத்து அனுப்பி
கற்சிலை வடிவிலே கன்னி இருக்கிறாள்......


காயமதனை ஆற்றிட மருந்து வருகின்றதா
காயத்தில் பாய்ந்திட அம்புகள் வருகின்றதா
மயங்கும் நிலையில் இதயம் துடித்து
தூதுசென்ற தென்றலில் தேடுகிறாள் விழிபூக்க......

எழுதியவர் : இதயம் விஜய் (26-Feb-17, 1:02 pm)
Tanglish : kathalin ninaivil
பார்வை : 327

மேலே