நம் வீட்டிலும் ஒரு குற்றவாளி இருக்கலாம்

....நம் வீட்டிலும் ஒரு குற்றவாளி இருக்கலாம்...

எங்கேயும் எப்போதும் வன்முறைக்கு ஆளாகின்ற பெண்கள்,மிக எளிதாக மக்களால் மறக்கப்பட்டு விடுகிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள்.பெண்கள் சிறுமிகள் ஏன் பாட்டிகள் கூட சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களைக் கேட்டு அனுதாபப்பட்டு நகர்ந்திருக்கிறோம்.
இந்தக் கொலைகளுக்கு நீதி கேட்டு எழுந்த ஒன்றிரண்டு குரல்களும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களின் ஓலத்தில் ஒடுங்கிப்போய்விட்டன.

படுகொலை செய்யப்பட்ட உயிர்களுக்காகப் போராடுவது இருக்கட்டும்.நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறோம்??குழந்தைகளுக்கு குட் டச்,பேட் டச் பற்றி சொல்லித்தர வேண்டும் என இதற்குத்தான் சொல்கிறோம் என யாரும் பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டாம்.கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் அந்த அறிவும் தெளிவும் இருந்திருக்கும்.நடந்திருப்பது அத்துமீறல் அல்ல கொடூரம்.காமக் கொடூரனிடமிருந்து சிறுகுழந்தைகள் எப்படி "குட் டச்,பேட் டச்" அறிவின் மூலம் தப்பிக்க முடியும்?

பெண்ணாகப் பிறப்பதே குற்றமா.....????

கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாகவோ இளம் பெண்ணாகவோ இருந்தால் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள் என்பார்கள்.உண்மையில் இதெல்லாம் பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுமா என்பதே பெரிய கேள்விக்குறி.தான் கற்றுத் தேர்ந்த ஒரு கலையைத் தன் பாதுகாப்புக்குக் கூட அந்தப் பெண்ணால் பயன்படுத்த முடியவில்லை.எதிரி யார் எப்படித் தாக்குவான் என்று தெரிந்தால் ஒழிய தற்காப்புக் கலை பயின்ற பெண்ணால் கூட தன்னைத் தற்காத்துக் கொள்வது கடினம்.இந்நிலையில் ஏதுமறியாப் பெண்கள்,வன்முறைகளுக்கு மிக எளிதாக ஆட்படுகின்ற நிலையில்தான் இந்தச் சமூகம் பாழ்பட்டுக்கிடக்கிறது.பெரியவர்களின் நிலையே இப்படி என்றால் குழந்தைகளின் நிலை?

குற்றவாளிகளைத் தண்டிக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாடம் நடத்தியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம்.
"நீ ஏன் ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனாய்?","நீ ஏன் குட்டைப் பாவாடை அணிந்தாய்?","நீ ஏன் ஆண்களோடு இயல்பாகப் பேசுகிறாய்?","நீ ஏன் சத்தம் போட்டு சிரிக்கிறாய்?" என்று நீளும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.
நீ ஏன் பெண்ணாகப் பிறந்தாய்?? என பெண் பிறப்பையே கேள்வியாக்கி,அவள் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் ஆளாக வேண்டிய பிறவிதான் என்று சொல்லி சொல்லியே வளர்த்தெடுப்பார்கள் போல.

பெண்களைப் பார்த்து "நீ அப்படி இரு,இப்படி நட என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கும் சமூகத்தில் ஏன் ஒரு ஆணைப்பார்த்து "நீ ஒழுக்கமாக இரு",என்று சொல்லி வளர்ப்பதில்லை?அவன் ஆம்பிளை அப்படித் தான் நடப்பான்.பொம்பளை நாமதான் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்ற வார்த்தைகள் எத்தனை ஆபாசமானவை.பிறந்தது முதலே ஆணுக்குள் திமிரையும் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் ஏற்றிவிட்டு,வளர்ந்த பிறகு அவன் பெண்களை மதித்து நடப்பான் என்று எதிர்பார்ப்பது மடத்தனம்.ஆண் என்கின்ற அகம்பாவத்துடன் சாதி ஆணவமும் சேர்ந்து கொண்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தப் பிறவியில் நீதி கிடைக்காது.

சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா....??

பெண்கள்,குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பல்வேறு சட்டங்கள் அமுலில் உள்ளன.ஆனால் அந்தச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு எத்தனைப் பெண்களுக்கு இருக்கிறது?அப்படியே நாடினாலும் நீதி கிடைப்பதற்குள் சந்திக்கிற அலைக்கழிப்பும் அவமானமும்,நீதியே தேவையில்லை என ஒவ்வொரு பெண்ணையும் முடக்கியே உட்காரவைத்துவிடும்.மீறிப் போராடுகிறவர்களுக்கும் நீதி என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு நொடியும் பெண்களை அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாக்குகின்ற சமூகத்தில் இருந்துகொண்டுதான் பண்பட்ட சமூகமென்று மார்தட்டிக்கொள்கிறோம்.இந்தப் பொதுச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண்கள் அஃறிணைகளுக்கு நிகரானவர்கள்.அவர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் வன்முறைகளும் படுகொலைகளும் இருக்கின்றன.

மனித மனங்களில் நெடுங்காலமாகப் புதைந்திருக்கும் வக்கிரமும் வன்முறையும் சமீப ஆண்டுகளாகத் தன் கோர முகத்தை அதிகமாக வெளிப்படுத்திவருகின்றன.அவர்களின் வக்கிரங்களுக்கு தீனி போட கையில் கிடைக்கின்ற குழந்தைகளும் பெண்களும் அதற்குப் பலியாகிறார்கள்.குழந்தையோ குமரியோ ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் உடல்கள் மட்டுமே என்ற எண்ணம்தான் தலைதூக்குகிறது.

குழந்தைகள் மீதான வன்முறைகளில் பெரும்பாலும் நமக்கு அறிமுகமான அல்லது நம் வீட்டைச் சேர்ந்த நபர்களால்தான் நடைபெறுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது நாம் குடியிருக்கும் ஊரில்,தெருவில் ஏன் நம் வீட்டில்கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் என்ற அச்சமும் எழத்தான் செய்கிறது.

மனித மனங்களில் ஒழுக்கத்தையும்,கண்ணியத்தையும் விதைக்காத கல்வி முறையால் யாருக்கு என்ன பயன்?சக உயிரின் வலி புரியாத ஒரு தலைமுறையைத்தான் நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்!

இது பத்திரிகையொன்றில் வெளியான பதிவு....

எழுதியவர் : அன்புடன் சகி (6-Mar-17, 6:09 pm)
சேர்த்தது : உதயசகி
பார்வை : 1473

சிறந்த கட்டுரைகள்

மேலே