நான் யார்

நான் …

மௌனங்களின்
கூச்சல்களை
நான் ரசிப்பேன்
கூப்பாடுகளின்
நிசப்தங்களையும்
நான் கவனிப்பேன்

கூட்டங்களுக்குள்
தனியாகவும் ,
தனிமையில்
கும்பலாகவும் ,
நான் நிற்பேன்


குழந்தையின் அழுகையில்
மிதமிஞ்சி வழியும்
அப்பாவித் தனங்களை
நான் ஆராதிப்பேன்
பாட்டிகளின் புன்னகையில்
புதைந்து போன
பழங்கதைகளை
நான் தேடுவேன்


அடர்ந்த
மர இலைப் பந்தலின்
சிறு துளைகளின்
வழியே
வானின் நீலங்களை
நான் பருகுவேன் .
வெட்ட வெளியில்
எங்கிருந்தோ
பறந்து வரும்
பச்சை இலையை
நான் யாசிப்பேன்

இதயத்தின்
கண்ணீர்த் துளிகளையும் ,
கண்களின் சிரிப்பையும் ,
நான் சேமிப்பேன்

ஒரு குவியத்திலிருந்து
நான் விரிவேன்
சுருங்கிக் கொண்டே வந்து
ஒரு புள்ளியில்
நான் குவிவேன்

இப்படியே
தேடிக் கொண்டும் ,
ரசித்துக் கொண்டும்
இருக்கும்
நான் யார் ..... ?

எழுதியவர் : அனுசுயா (16-Mar-17, 11:33 pm)
Tanglish : naan yaar
பார்வை : 1569

மேலே