என்னுள்
என்னுள்...
சுவடுகள் மறந்தது சுதந்திரம் தொலைந்தது
சுமைகளும் நிறைந்ததோ மானிடா உன்
சுகங்களும் தொலைந்ததோ!
ஆழக்குழிக்குள் அடைத்து வைத்தாலும்
ஆழ்கடலில் மூழ்கடித்துவிட்டாலும்
மோதி பிளந்து கிழித்து வருவேன்
விதி என்று முடங்கிடமாட்டேன்..
நாளங்களின் வீரியத்தில் குருதியாய்
நம்பிக்கை தான் பாய்கிறது என்னுள்
துளி நீர்தொட்டால் போதும்
துளிர்விட்டு துயர்நீக்க நான் வருவேன்
அழகான மலர்கள் அதிலே
அள்ளிவீசும் நறுமணங்களும்
காய்கனிகளும் நல்ல
சாய்மனைகளும்
தென்றல் காற்றும்
தேகம் குளிரும் நிழலும்
சோலைக் குருவிகளின் கானங்களும் மழையும் மண்காப்பும் மழலையின் ஊஞ்சலும் மஞ்சமும் மனித வாழ்வும்
என்னுள்ளே- காத்திருங்கள்
எட்டி உங்கள் கைதொடுவேன்...
சோலையும் காற்றோசையும் நாளையின் சுவாசங்களும்
ஆயிரமாயிரம் காடும் உயிரின்
ஆக்கத்திலும் உன்
அழகும் அமைதியும் கூடவே
அழிவும் என்னுள்ளே...
உனக்காக மானிடா நான் விதையாக...
எனக்காக நீ கொடுத்தது என்ன???