சிந்தனைத் துளி

சிந்தனைத் துளி!
===============

விண்ணுடன் முகிலாடும்
***விழிநீரில் தவழ்ந்தாடும்
குளிர்நிலவின் முகத்துக்குள்
***பனித்துளிக்கு ஒப்பாகி
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

காதலர்கள் சேர்கையாலே
***களிப்பின் உச்சத்திலே
விழிநான்கின் வழிவந்த
***வழிந்த கண்ணீராய்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

பெண்மையின் கருப்பைக்குள்
***பனிக்குடத்தில் பக்குவமாக்
படுத்துறங்கும் பிஞ்சு
***கருத்துளியின் உருவமாய்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

கடல்நாயீன்ற குட்டிபோல்
***கண்ணுக்குள் மாயத்தோற்றமாய்
பழுப்புநீல வண்ணத்தில்
***புதுஜனனம் எடுத்ததுபோல்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

தாமரையிலை மீதிலென்றும்
***தங்காத தண்ணீர்முத்தென
வெண்துளியாய் வீழ்ந்துபல
***மணித்துளி வண்ணமாய்த்தவழ்ந்து
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

நீருக்குமேல் மிதந்த
***நீலவண்ண நீர்த்துளியாய்
மாயமாய்மதி மயக்கும்வண்ணமாய்
***மானுடச்சிந்தைக்கோர் விருந்தாகி
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

வண்ணம் பலகாட்டும்
***வண்ணத் துளியாய்
எண்ணத்தைச் சிதறடித்த
***எண்ணத் துகளாய்
கவிபாடும் சிந்தனைக்கோர் கவித்துளியானாய்!

வல்லமை படக்கவிதைப் போட்டிக்கு எழுதிய கவிதை..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (20-Mar-17, 5:22 pm)
பார்வை : 128

மேலே