மஞ்ச கயிறு-சிறுகதை

‘பளிச்சென்ற புன்னகைப் பூக்கும் இதழ்கள் அவனுக்கு, அவன் பெயர் மதி. மதியைப் போலவே வெண்மையான பளிச் முகம். அந்த புன்னகைக்கு மயங்காதவர் எவருமில்லை.
அப்படி மயங்கியவர்களின் பேதைப் பெண்ணொருவளான மீனாகுமாரி.
அவன் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அந்தக் குழியில் விழுந்தவள், மீண்டும் எழமுடியாமல் காதல் மயக்கத்தில் வீழ்ந்து விட்டாள்.
நாள்தோறும் “கண்கள் நான்கும் நாளெல்லாம் கதைகள் பேசின. தேனினும் மிஞ்சிய அமிர்தத்தை அருந்த துடித்தன அவனிதழ்கள். “ திருமணத்திற்கு முன்பே வேண்டாம்” என்றாள்.
நாணத்தால் நாட்களைக் கடத்தினாள், ஆனால் வயதின் வாளிப்பு, அவளை வீழ்த்தி விட்டது.
“இதழில் தேனெடுக்க சம்மதமா ? அவன் கேட்க, அவளோ “வேண்டாம்….வேண்டாம்…வேண்டவே வேண்டாமென்றாள்”
காதலில் வேண்டாமென்றாள்….. “வேண்டுமென்ற அர்த்தமென” அவனுக்கு புரிந்திருந்த்து. அதனை மிகச் சரியாக பயன்படுத்தி ”இதழில் தேனெடுக்க…. அவள் நாணத்தால் நெளிந்து…. கடைசியில்….. படுக்கைப் போரில்….. வெற்றி பெற்றுவிட்டான் மதி.
மறுநாள், காலைக் கதிரவன் ஒளிக்கீற்றினைப் பரப்பிட, மதி மறைவது போலவே மதியும் மறைய தயாரானான்.
மதியின் கரங்களைப் பற்றி “ என்னைக் கைவிட மாட்டீர்களே, ஒங்களை நம்பித்தான் என்னுடலை ஒப்புவித்தேன்” என கண்களில் நீர்த்திவளைகளோடு கோரிக்கை விடுத்தாள்.
“ உன்னைக் கைவிடுவேனோ ? என் வாழ்க்கைப் பயணம் உன்னோடுதான், பாதையும், பயணமும் மாறாது” என்று அவளின் பூங்கரத்திலடித்து சத்திய பிரமாணம் செய்தான்.
“அவள் அதையும் முழுமனதோடு, ஏற்றுக்கொள்ளாமல், திருமணம் எப்பொது?, பெற்றோரிடம் அனுமதி பெற என்ன முயற்சி எடுப்பீர்கள் ? அவர்கள் சம்மதம் தருவார்களா ? கேள்விகளை அடுக்கி கொண்டே போக…… அவனோ “உறிம்“ ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துக் கொண்டான்.
ஒற்றை வார்த்தையில் பதிலை உதிர்த்து விட்டு வாசற்படியைக் கடந்தவன், மாதங்கள் கடந்தன. அவன் வரவில்லை. வார்த்தைகளில் வெல்லத்தைக் கலந்தவனின் , நெஞ்சினில் பாகல் இருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள்.
“ ஓட்டப்பந்தயத்தில், முன்னேற துடிக்கும் வீரன் போல, அவளின் வயிறு முந்த துவங்கியது. அஞ்சினாள்…அரற்றினாள். ஆறுதலளிக்க ஆளில்லை. தூற்றுவதற்கும், துணையாக இருந்து பலர் அவளை துரத்தியடித்தனர். வார்த்தைகளில் விஷத்தைக் கொட்டினார்கள் சிலர். முடிச்சு போடும் முன்பே முந்தி விரித்தவள்தானே, தமக்கும் முந்தி விரிப்பாளோ, என்ற நப்பாசையில் நட்பு பாராட்டியவர்களும் இருந்தனர்.

, வயிற்றில் வளரும் சிசுவை அழித்து விடு, பகட்டான வாழ்க்கைக்கு படுக்கையறையை தயார் செய்து கொள் என துர்போதணை செய்தவர்களும் உண்டு.
வாலிபத்தின் தடுமாற்றத்தால் தான் செய்த தவற்றால், அரும்பி வரும் மொட்டினை அழிப்பதா ? இன்னொரு உயிரினை அழிப்பதற்கு உரிமையென்ன எனக்கு இருக்கிறது என எண்ணினாள்.
பச்சை சிரிப்பிலும், பளபளப்பான முகப்பொலிவிலும் மயங்கியது“ பேதமைத்தனமென்று“ அவளே புலம்பிக் கொண்டாள். புலம்பலைப் போக்குவதற்கு வழியாக வீட்டின் அலமாரியில் உள்ள புத்தகங்களை அடுக்கி வைத்தாள். அப்போது, ஒரு புத்தகம் தவறி கீழே விழுந்தன.
அவற்றைக் கையிலெடுத்தாள். அந்த புத்தகம்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள்.
புத்தகத்தைப் பிரித்தாள். குறள்கள் வரிசைக் கட்டி என்னைப் படி, வாழ்க்கையை பிடி என்பது போலிருந்த்து.
படித்தாள் ஒரு குறளை. அக்குறள் இதோ

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது “ (811)

புரியவில்லை அவளுக்கு,… பக்கத்திலேயே விளக்கம், படித்தாள்

“ஒருவருடைய நடத்தை…..அருந்துவதற்கு இளநீர் போன்ற சுவையுடைய நீராக இருந்தாலும், அவர் பண்பாட்டைப் பேணாதவராக இருப்பின், அவருடைய நட்பை வளர்ப்பதை விட, துண்டிப்பதே நலமென குறிப்பிட்டிருந்த்து.

“அட டா ! இந்தக் குறள் முன்னமே கண்களில் பட்டிருந்தால், தன்னை இழந்திருக்க மாட்டோமா” என எண்ணினாள். வாசலின் வழியே விழிகள் வைத்து காத்திருந்தாள்…காத்திருந்தாள்… வரவே இல்லை அந்த காமுகன்.
வாசற்படியைத் தாண்டி, இரயிலைப் பிடித்தாள்…… வெகு தொலைவிற்கு அப்பால்….. கடைசியாக ஒரு ஊரில் ரயில் நின்றது.

இரயிலில் இருந்து தனியாகத்தான் இறங்கினாள். ஆனால் கழுத்தில் …..“பழுப்புநிற மஞ்சள் கயிறு” தொங்கி கொண்டிருந்த்து.


கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (22-Mar-17, 6:17 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 756

மேலே