பட்டிக்காட்டானின் கல்லூரி அனுபவம்-2

சோகமாய் நகர்ந்த ஐந்தாவது செமஸ்டரில், மனோபலம் பற்றிய பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் தமிழிலும், ஆங்கிலத்திலும்.....

ஞானம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்க, பல அனுபவங்கள் உதவ நண்பர்களாகிய கண்ணனும், கண்ணன் சிவாவும் மிக ஆறுதலாக இருந்தார்கள் எனது கருத்துகளின் நிலைப்பு தன்மைக்கு.....

நேர்மறையான சூழ்நிலைகள் உருவாகின எதிர்மறைகள் யாவும் நீங்கியதாலே.....

பொறுமையான மனநிலை பெற்று, மற்றவர்களைப் போன்று ஆடம்பரமாக வாழும் ஆசையை துறந்தேன், நியாயமாக உழைத்து கிடைத்ததைக் கொண்டு வாழ்வதே சந்தோஷமென்று உணர்ந்ததாலே......

எனது அனுபவம் மட்டுமல்லாமல் நண்பர்களின் அனுபவங்களும் பேருதவியாக இருந்தன, மகிழ்ச்சியான மனநிலை வளர....

துக்கமென்று வருந்த எந்தத் துன்பமும் இல்லை,
இன்பமென்று துள்ள எந்த இன்பமும் இல்லை,
இன்பமும், துன்பமும் ஒன்றென்ற நிலையில் தான் சில வெற்றிகளைப் பெற்றேன், எனக்காக, நான் மட்டுமல்ல....
நண்பர்களுடன் இணைந்தே அவ்வெற்றிகள் சாத்தியமாயின.....
வெற்றிகள் வந்தாலும் சில நேரங்களில் எதிர்மறைகள் வந்து தாக்கிய வண்ணமாகத் தான் இருந்தன....
ஒரு ஆசிரியருக்கும் எனக்கும் சுத்தமாக ஆகாது என்பதால்....

அந்த ஆசிரியருக்கும் எனக்கும் என்ன பகை? என்றே தெரியவில்லை....
எப்போதும் ஏதாவது ஒரு குறை கூறிக் கொண்டே இருப்பார், அவரிடம் ஆயிரம் குறைகள் இருப்பதை அறியாமலே.....

ஆசிரியரின் பணியில் சாதி பாகுபாடு பார்ப்பதும், மாணவர்களை எதிர்மறையான மதிப்பீடு செய்வதும்,
எவ்வளவு பெரிய குற்றமென்பதை அவர் அறியவில்லை போலும்.....

இப்படியும் ஒரு ஆசிரியர் இருக்க, அந்த ஆசிரியரால் நான் கண்கள் கலங்கிய நேரம், இரண்டு ஆசிரியைகள் வந்து எனக்கு தைரியம் சொன்னார்கள், ஒரு ஆண் பிள்ளை கண் கலங்கலாமா? என்று....
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இது......

அதே ஆசிரியைகளில் ஒருவர் நான் மதிய உணவு உண்ணாது இருந்த ஒரு நாள் என் முக வாட்டம் கண்டு சாப்பிட்டியா? என்று விசாரித்து, நான் இல்லையென்றதும் என்னிடம் பணமில்லை என்பதை தெரிந்து கொண்டவராய் பணம் தந்து சாப்பிட்டுவிட்டு வாவென்று கூறியபோது, அதை வாங்கத் தயங்கிய என்னிடம் என்னை உனது சகோதரியாக நினைத்து வாங்கிக் கொள் என்று கையில் தந்து சென்றார், அன்போடு.....
இதுவும் எனது வாழ்நாளில் குறித்து வைக்கப்பட வேண்டிய தருமமானது.....

உதவிகளில் சிறியது, பெரியதென்ற பேதங்களில்லை....
கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மனமே பெரியது...
உன்னதமானது....

இந்நிலையில் ஐந்தாவது செமஸ்டர் தேர்வு தொடங்க, தேர்ச்சி பெறாத 17 பாடங்களுக்கு எழுதினேன்....
அதில் 9 பாடங்களில் தேர்ச்சி பெற்றேன்....
17-9=8.
இன்னும் எட்டு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்..
அத்துடன் ஆறாவது செமஸ்டர் பாடங்களும் சேர்ந்து பதினேழாகிவிட்டன.....

நிச்சயமாக தேர்ச்சி பெறுவேனென்ற நம்பிக்கை உள்ளது என்னிடம்....

இப்பொழுது ஆறாவது செமஸ்டரில் பயில்கிறேன் நேர்மறையான எண்ணங்களுடன்....

பாட இடைவேளைகளில்
நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம்...
அதுவும் ஜீனியர் பசங்களோடு பலப்பரீட்சை செய்வது வழக்கம்...

அவ்வாறு விளையாடும் போது, எந்த ஆசிரியருக்கு என்னைப் பிடிக்காதோ அவர் பார்த்துவிட்டார்....
விளையாடக் கூடாதென்று சொல்லிவிட்டு சென்றார்....
அதே நாளில் மீண்டும் விளையாட அதே ஆசிரியர் பார்த்துவிட்டு நேராக எங்கள் துறையின் H.O.D எனப்படும் தலைமையிடம் புகார் செய்ய , H.O.D எங்களை அழைத்தார்....
ஆனால், எங்களைத் திட்டியதெல்லாம் அந்த ஆசிரியர் தான்... அவருக்கு நாங்கள் மகிழ்ச்சியாய் சிரித்து விளையாடியது பிடிக்கவில்லை என்பது அவர் பேச்சிலேயே தெரிந்தது....
பிறகு, H.O.Dயிடம் இவர்களை என்ன செய்யலாம் மேடம்? என்று கேட்டார்......

H.O.D நாங்கள் விளையாடியதை ஒரு தவறாக நினைக்கவில்லை, எனினும் அந்த ஆசிரியர் புகார் செய்திருப்பதால்,
எங்களை கண்டிப்பது போல் பேசினார்....
ஆனால், தண்டனை ஏதும் வழங்கவில்லை.....
H.O.Dக்காக அப்படி விளையாடுவதை விட்டு விட்டோம்.....
ஏனெனில், H.O.D ரொம்ப நல்லவர்.....
பல மாணவர்களுக்கு பண உதவி கூட செய்து இருப்பதாக ஜீனியர் நண்பர்கள் கூறினார்கள்.....

ஜீனியர் நண்பர்களுடன் இருக்கும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்....
நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.....
வயது வித்தியாசமின்றி என்னைச் சமமாக மதித்துப் பழகும் அந்த நண்பர்களும் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்கள்....

இப்போது தொடர்கிறது ஆறாவது செமஸ்டர்....
இன்னும் ஒரு வருடம், அதாவது இரண்டு செமஸ்டர்கள் மீதமுள்ளன....
பொறுத்திருந்து பார்க்கலாம் அவை தரும் அனுபவங்களை.....

(தொடரும்.....)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Mar-17, 9:59 pm)
பார்வை : 716

மேலே