மேகமதை தூது விட்டேன் --- காதல் கவிதை --- வஞ்சித்துறை

மேகமதை தூது விட்டேன் !!! --- காதல் கவிதை --- வஞ்சித்துறை


மேகமதை தூதுவிட்டேன்
மெல்லியலாள் மனமறிய !
சாகசங்கள் பலசெய்தேன்
சந்திக்க நினைத்தேங்கி !!!


தாகத்தைத் தீர்த்திடலாம் .
தாபத்தை என்செய்வேன் !
பாகமாக உணர்ந்தேனே !
பக்கமாக அழைக்கின்றேன் !!!


வெண்மேகம் தூதாகி
வேகமாகச் சென்றிடுவாய் !
கண்களிலே தேக்கிவைத்த
கனவுதனைச் சொல்லிடுவாய் !!!


பெண்மகளை விலக்கினாலே
பெருந்துன்பம் வந்திடுமே !
உண்மையினை உரைத்திடுவாய் !
உள்ளமதைச் செப்பிடுவாய் !!!


என்னிதயம் முழுவதிலும்
என்றென்றும் அவள்நினைவு !
பன்னாளும் இருந்திடவே
பதியாக மாறிடுவேன் !!!!


மேகங்கள் ஒன்றுகூடி
மேதினியில் தூதுசெல்லும் !
மோகத்தால் தவிக்கின்றேன்
மோகமுள்ளும் அவளன்றோ !!!


தூதுதனை நாளும்நான்
துணையாக அனுப்புகின்றேன் !
மாதுநீயும் அறிவாயோ !
மலர்வாயோ மதிமுகமே !!!


தீதுமிலை காதல்கொள் !
தீண்டிடுவாய் எனையுந்தான் !
ஓதுகின்ற மந்திரங்கள்
ஒலிக்கட்டும் உன்செவியில் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Mar-17, 3:00 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 171

மேலே