இரவாட்டம்

செக்கச் சிவந்திட்ட வானத்தி லேயந்தச்
. சந்திர னின்னுரு கண்டேன் - அதன்
. சங்குவெள் ளைநிறம் கண்டேன் - இருள்
. சாடும் குணத்தினைக் கண்டேன் - அதைச்
. சார்ந்திங் கொளிர்விடும் வண்ணவிண் மீன்களைச்
. சான்றெனப் பாவுக்கு மொண்டேனடி !
பக்க மிருந்திடும் யாவும் கருத்திடப்
. பட்டப் பகல்மறைந் தாச்சு - எழில்
. பற்றும் சிவப்பெழும் பூச்சு - இதில்
. பாரினில் துன்பங்கள் போச்சு - அட
. பார்க்கும் திசையெலாம் மக்கள் குவிந்தனர்
. பாட்டுகள் ஆட்டங்க ளாச்சுதடி !

ஆடிய மாந்தரின் அன்பு முகத்தினில்
. ஆண்டவன் வந்தனன் பாரீர் - இர
. வாட்டம் தனில்வந்து சேரீர் ! - இதன்
. ஆனந்தம் ஊருக்குக் கூறீர் ! - இந்த
. அண்ட சராசரம் கண்டு குலுங்கிட
. ஆட்டங்கள் ஆடுவம் வாரீரிங்கே !
ஓடின துன்பங்கள் ஒட்டின இன்பமென்
. றோதித் தினந்தினம் பாடீர் ! - மிக
. ஒய்யாரம் பொங்கிட ஆடீர் ! - சுடர்
. ஒன்றித் திகழ்ந்திடக் கூடீர் ! - அதன்
. ஒண்மையி லேபுதுத் திண்மையி லேமதி
. ஒன்ற மனங்களை நாடிடுவீர் !

யாவரும் ஒன்றெனும் நல்ல சமத்துவம்
. யாண்டும் நிலைத்திடச் செய்து - அதை
. யாரும் மதித்திட நெய்து - மழை
. யாவருக் காகவும் பெய்து - இனி
. யாரும் தனியில்லை என்ற முழக்கங்கள்
. யாவரின் நெஞ்சுளும் உய்திடட்டும்
மாவலி எய்தியிம் மண்ணினில் வாழ்ந்திட
. மாபெரும் சூளுரை ஏற்போம் - பின்
. மானிடர் எங்ஙணம் தோற்போம் ?? - களி
. மாந்திடப் புன்னகை தூற்போம் ! - புகழ்
. மார்க்கம் அறிந்தனம் வாட்டம் நமக்கில்லை
. மானுடம் வாழ்கென ஆர்ப்பரிப்போம் !

பின் குறிப்பு : கும்மிப்பாடலைப் போன்றே இருக்கும் இந்தப் பாடலை எனக்குக் கற்பித்த மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ஐயாவுக்கு நன்றிகள் கோடி..

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:28 am)
பார்வை : 25

மேலே