ஞானக் கல்யாணீ

வாழிய வாழிய வாணீ- புவி
வட்டமி யக்கிடும் ஞானக்கல் யாணீ !

வெள்ளைக் கமலத்தின் மீது - பல
. வேதவி ளக்கமு ரைத்திடும் மாது !
கொள்ளை யெழில்பட நின்றாள் - திருக்
. கோலத்தி லேமனத் தீமையை வென்றாள் !
உள்ளத் தொளிர்விடு கின்றாள் - மன
. ஊனம் சிதைய அருள்தரு கின்றாள்
விள்ளற் கெதுவெளி தாகும் - அன்னை
. வீரக் கழலில் மடமைகள் சாகும் ! (வாழிய..)

வீணை கரத்தினள் அன்னை - கவி
. வித்தை கொடுத்திடும் வித்தெங்க ளன்னை !
காணற் கரியவ ளன்னை - மதிக்
. கங்கில் வளர்ந்திடும் சோதியெம் மன்னை !
வாணி யெனப்பெயர் கொண்டாள் - பிழை
. வந்த விடத்தில் அவற்றையும் விண்டாள்
பூணுமெய் ஞானத்தில் ஆர்ப்பாள் - அந்தப்
.. பூவை பதத்தில் விழுந்திடில் ஏற்பாள் ! (வாழிய..)

பாரதி தேவியின் கைகள் - இந்தப்
. பாரி லறியாமை நீக்கிடும் கைகள் !
நேரிலொ ளிர்விடும் வீணை - கவி
. நெய்யும் கவிஞர் உதட்டினில் சேனை !
பாரை விழித்திடு கின்றாள் - உள
. பக்திகொண் டோரைப் புரந்தருள் கின்றாள் !
காரியம் வென்றிட வேண்டில் - திருக்
. காவியத் தாய்பதம் சரணமு ரைப்போம் ! (வாழிய..)

-விவேக்பாரதி

படம் : சுதன் காளிதாஸ்

எழுதியவர் : தெய்வத் தெருவிடை (27-Mar-17, 9:51 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 75

மேலே