வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு
வாலி சான்றிதழ் ( 2 )
வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு
பாசமலர் நீயெனக்கு பதியானேன் நானுனக்கு
வீசுதென்றல் நீயெனக்கு விடிவெள்ளி நானுனக்கு !
மாசுமற்ற மங்கையடி ! மறவாதே எனையுந்தான் !!
என்னருகில் நீயிருந்தால் எல்லையிலா இன்பங்கள்
உன்கண்கள் பேசிடுமே உருவமிலா உரையாடல் .
பன்மொழியும் காட்டிடுவாய் பருவமகள் நீதானே .
என்மொழியும் மறந்திடுமே என்செய்வேன் சொல்வாயே !
மந்திரமாம் காதலிலே மயங்கிநானும் நின்றிடவே
அந்தநாளின் நினைவுகளில் அகலவில்லை அன்புமனம் .
இந்தநாளும் எண்ணியெண்ணி இனிமையினை உணர்கிறேன் .
எந்தநாளும் நீவேண்டும் என்னவளே என்னருகில் !
பெண்மகளே பேசிடுவாய் பேதைமனம் தேடுதிங்கே
கண்களினால் நீவருடக் காதலினால் நோயுறவும்
வண்ணமகள் வாய்திறந்து வாட்டத்தைப் போக்கிடுவாய் !
எண்ணமெலாம் உன்னிடமே எத்திக்கும் நீயடியோ !
கலைமகளே என்னருகில் காதலினால் வந்திடுவாய்
மலைமகளே மரகதமே ! மறக்காதே என்னையும்தான் !
சிலைபோன்றே இருக்கின்றாய் சிற்பிசெய்த கலையழகே !
மலைபோன்ற துன்பங்கள் மாணிக்கமே மாற்றவாராய் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்