வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு

வாலி சான்றிதழ் ( 2 )


வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு
பாசமலர் நீயெனக்கு பதியானேன் நானுனக்கு
வீசுதென்றல் நீயெனக்கு விடிவெள்ளி நானுனக்கு !
மாசுமற்ற மங்கையடி ! மறவாதே எனையுந்தான் !!



என்னருகில் நீயிருந்தால் எல்லையிலா இன்பங்கள்
உன்கண்கள் பேசிடுமே உருவமிலா உரையாடல் .
பன்மொழியும் காட்டிடுவாய் பருவமகள் நீதானே .
என்மொழியும் மறந்திடுமே என்செய்வேன் சொல்வாயே !


மந்திரமாம் காதலிலே மயங்கிநானும் நின்றிடவே
அந்தநாளின் நினைவுகளில் அகலவில்லை அன்புமனம் .
இந்தநாளும் எண்ணியெண்ணி இனிமையினை உணர்கிறேன் .
எந்தநாளும் நீவேண்டும் என்னவளே என்னருகில் !




பெண்மகளே பேசிடுவாய் பேதைமனம் தேடுதிங்கே
கண்களினால் நீவருடக் காதலினால் நோயுறவும்
வண்ணமகள் வாய்திறந்து வாட்டத்தைப் போக்கிடுவாய் !
எண்ணமெலாம் உன்னிடமே எத்திக்கும் நீயடியோ !


கலைமகளே என்னருகில் காதலினால் வந்திடுவாய்
மலைமகளே மரகதமே ! மறக்காதே என்னையும்தான் !
சிலைபோன்றே இருக்கின்றாய் சிற்பிசெய்த கலையழகே !
மலைபோன்ற துன்பங்கள் மாணிக்கமே மாற்றவாராய் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Mar-17, 10:23 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 90

மேலே