அழகு

என் சின்னக்கண்ணன் அழகுதான்
பிஞ்சு விரல் நகம் பதித்து
உதட்டோரம் கீறும்போதும்
காக்காய் கடி கடித்து
எச்சில் மிட்டாய் கொடுக்கும் போதும்
தெருவோர மணல் அள்ளி
தேகமெல்லாம் பூசும் போதும்
செய்யாத தவறுக்கு
செல்லமாய் சிணுங்கும் போதும்
வலிக்காத அடிகளுக்கு
வலுவூட்டி கத்தும்போதும்
வாராத் கண்ணீருக்கு
எச்சில் பூசி ஏய்க்கும் போதும்
மருவி மருவி மழலைதனில்
பொய்க்கதைகள் கூறும்போதும்
அழைப்பு மணி அடித்து
அண்டைவீட்டில் ஒளியும் போதும்
கதவோரம் ஒளிந்து நின்று
நுழைவோரை அரற்றும் போதும்
உறவு பிரித்து அறியாது
ஊரார் பின் ஓடும் போதும்
கனவில் வந்த பாம்பை எண்ணி
கட்டிப்பிடித்து கதறும் போதும்
கரடி பொம்மை சவாரி ஏற்றி
மிதிவண்டி அழுத்தும் போதும்
துடைத்து வைத்த வீட்டினுள்ளே
சேற்றுக்காலில் மிதிக்கும் போதும்
என் சின்னக்கண்ணன் அழகுதான்............

எழுதியவர் : சு உமாதேவி (31-Mar-17, 8:48 pm)
Tanglish : alagu
பார்வை : 142

மேலே