தெரியலையே

காவிரி வருவான்னு
கரைவேட்டி சொன்னது
யாரை பற்றி சொன்னதோ!
விவசாயி கண்களில்
உருண்டு விழுவது அவளா?

பெத்தபுள்ள அழுதா—ஓடிவந்து
பாலூட்டும் தாய்போல
பாரத மாதா நினைக்கலையே!
நெடு நாளா நீர் வேண்டி
நாளெல்லாம் அழுதாலும்
நல்லவழி காட்டலையே!

உழுத மண்ணில் நட்டுவைத்த
உயிருள்ள நாத்தெல்லம்
வாடி சருகாகி மடிய—கண்ட
விவசாயி உடலுமல்லவா
உடன் கட்டை ஏறுது

கருணை காட்ட, கையெடுத்து
கும்பிட்ட தெய்வமெல்லாம்
வாய் பொத்தி மௌனம் காப்பது
அதிகார வர்க்கம்போல
இரட்டை வேடம் போடுதோ!

காடு கழனியெல்லாம்
காய்ந்து பாலை நிலமானா
கால் வயித்து கஞ்சிக்கும் வழியேது?
உயிரை விடும் விவசாயிக்கு
வாய்க்கரிசி போட கூட
வழியேதும் தெரியலையே!

எழுதியவர் : கோ. கணபதி. (2-Apr-17, 9:08 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : theriyalaiye
பார்வை : 87

மேலே