மகிழ்வே நிலைக்குமா

​பொட்டு வைத்த மொட்டு ஒன்று
வெட்டுப் பட்ட மனநிலைக் கண்டு
உள்ளம் துடித்தது உண்மை அறிய !
துள்ளும் இதயம் துவண்ட முகத்தில்
விழிகள் சிவந்து சோகம் மிகுந்ததால்
வழியும் நீருடன் முனகல் ஒலித்தது
தெரியா மொழியில் புரியா குரலாக !

போதை ஏற்றிய கோதை இவள்தானோ
பாதை மாறிய பாவையும் இவள்தானோ
காதல் தீப்பற்றிய காரிகை இவள்தானோ
காதல் விபத்தில் சிக்கிய கன்னியிவளோ
காதல் மயக்கத்தில் தடுமாறி நிற்பவளோ
தன்னையே இழந்த தவறான நிலையோ
கணிக்க இயலா சூழலில் இவளன்றோ !

கண்ணீர் என்றும் கன்னிக்கு சொந்தமென
பழங்காலம் முதலே புழக்கத்தில் பழக்கம் !
மாறிய காலத்திலும் மாரியாய் பொழியுது
மாறாத பெண்களும் மண்ணில் உள்ளனர்
கவலைக் கடலை கண்ணில் சேமிப்பாய்
வைக்கும் நிலையும் வையத்தில் மாறுமா
மகிழ்வே நிறைந்த வாழ்வும் நிலைக்குமா !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Apr-17, 8:59 am)
பார்வை : 287

மேலே