அடிமையாகாதே, அடிமையாக்காதே

வாழ்வின் தத்துவம் உணர்ந்த பின்பும் மனதில் சஞ்சலம் ஏனோ என் சகோதரா?...

மனதை மயக்கி,
இன்பத் துன்பங்களுக்குள் சிக்கி தவிக்க வைக்கும் ஆசாபாசங்களுக்குள் அகப்பட்டு விடாதே என் சகோதரா....

ஆன்ம ஞானம் அறிந்து அதனை வாழ்வென்றாகிய பின்பே, பேதையராய் கண் கலங்கி வாழும் காலத்தை நரகமாக்கி விடாதே என் சகோதரா....

இயற்கையின் குணமுணர்ந்தே நீ வாழும் காலத்தைப் பிறருக்குப் பயனுள்ளதாக்கு என் சகோதரா....

உண்மையாய் நீ வாழும் போது, அவமானங்கள் நேரிட்டாலும் உண்மையிலிருந்து என்றென்றும் விலகுதல் கூடாது என் சகோதரா....

உலகமொரு சந்தையாய், அன்பு, திறமை, காதல் என்ற உயர் உணர்வுகள் யாவும் வியாபாரப் பொருட்களாய்,
விலை கூறி விற்கவும் வாங்கவும் மானிடர்கள் வருவார்களே என் சகோதரா....
உன்னை விற்று பிறருக்கு அடிமையாகி விடாதே என் சகோதரா....
பிறரை வாங்கி என்றும் அடிமையாக்கி விடாதே என் சகோதரா....

நிரந்தரத் தீர்வே என்றும் வேண்டும் என் சகோதரா....
நிரந்தரத் தீர்வு ஏற்படாத வரை யாவும் பிரச்சனைகளாய் விரிந்து கொண்டே செல்லும் என் சகோதரா....

உன்னைப் பாதித்த விடயங்களால் பிறர் என்றும் பாதிக்கப்படாவண்ணம் பார்த்துக் கொள் என் சகோதரா....
மகிழ்ச்சி என்றும் உனதாகட்டும் என் சகோதரா....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Apr-17, 9:11 pm)
பார்வை : 1539

மேலே