பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும்

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது - இதெல்லாம் கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே பெருமளவில் விளங்குகின்றன.

இந்த தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும், இன்னொன்று பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்ளச் சொல்லிகொடுத்திருக்கிறார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

சாஸ்தா வழிபாடு

ஐயப்பனிடம், பந்தளராஜா கேட்டார் ‘‘மணிகண்டா, ஹரியும், ஹரனும் பெற்ற மைந்தன் நீ, உன்னைக் காண 40 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டுடன்தான் வரவேண்டும் என்கிறாய். பெற்ற அன்னை, தந்தை, கட்டிய மனைவி பெற்றெடுத்த மக்களோடு குடும்பமாக உன்னை காண நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
‘‘தந்தையே, எனது சாஸ்தா அவதாரம், உங்கள் கேள்விக்கு பதிலாய் அமையும். பங்குனி மாதம் உத்திரம் நன்னாளில் நீங்கள் எந்த இடத்தில், சாஸ்தா என்று என்னை அழைத்தாலும் நிச்சயமாக நான் வருவேன்” என்றான் ஐயப்பன். அப்படி சாஸ்தா வழிபாட்டினை மேற்கொள்ளும் திருநாள்தான் பங்குனி உத்திர நன்னாள்.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்கள் வசமாக்கிவிடக்கூடாது என்பதற்காக மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவர்களைத் தன் வசப்படுதினார். இதைக் கேள்விப்பட்ட சிவபெருமான் தான் அந்த மோகினி அவதாரத்தைக் காண விரும்பினார். அப்படியே மஹாவிஷ்ணு மோகினியாக மாற, ஈசன் அவளை மோகித்தார். விஷ்ணு தயங்கியபோது, நாராயணனே, என் மனைவி சக்தியின் வடிவம் தானே, இந்த ரூபம்! என் மனைவியாக இருக்கும் போது அவள் பவானி, கோபம் கொள்ளும் போது காளி, யுத்தம் புரியும் போது துர்க்கை, காக்கும் சக்தியாக மாறும் போது விஷ்ணு.

ஆக, இப்போது பெண்ணுருவில் இருக்கும் நீர் என் பார்வதிதேவியின்றி, வேறில்லை என்று கூறினார். பின்பு ஹரிஹர சக்திகள் சங்கமமாகியது. விளைவாக மஹா சாஸ்தா அவதரித்தார். அந்த நாளே பங்குனி உத்திரம் என்று கூறப்படுகிறது. சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பை ஈசன் அளித்தார். ஸ்திதி - சம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சி புரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். இதன் பின்னர் ஐயன் சிவ சக்தியரை வலம் வந்து வணங்கி, பூலோகம் செல்ல புறப்பட்டார். காஞ்சிபுரம் வந்த சாஸ்தா, ஈசனை லிங்கமாக்கி பூஜித்தார்.

சாஸ்தா சிவன், சக்தி, விஷ்ணு, மஹாலட்சுமி, பிரம்மன், கலைவாணி என முச்சக்திகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி, அனைத்து பூத சேனைகளும், சிவன், விஷ்ணுவின் ஏவலர்கள், இயக்கியர்கள்(மாடன்கள், மாடத்தியர்கள்) இவர்கள் எல்லோரும் சாஸ்தாவின் அன்பு கட்டளை ஏற்றே செயல்படுபவர்கள். சாந்த சொரூபத்திலிருக்கும் சாஸ்தா, ஆங்கார ரூபத்தில் அய்யனார் ஆகிறார். சாஸ்தாவிற்கு எழுப்படும் ஆலயங்கள் அவருடன் குறைந்தது 21 சைன்யங்கள் நிலைபெற்றிருப்பர். சாஸ்தா தனித்து இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் காவலுக்கு, பூதத்தார் மற்றும் கருப்பன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் ஆகிய நாமங்களில் எவரேனும் ஒருவர் இருப்பர்.

சாஸ்தா வழிபாடுக்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தம்பதியர் முந்தைய நாள் இரவு தாம்பத்யம் வைத்திருக்கக் கூடாது. அவருக்கு தேவையான பூஜைப்பொருள்களை வீட்டில் வாங்கி வைத்து மறுநாள் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். குலசாமிகளும், அவரோடு சாஸ்தாவும் குடும்பமாக இருந்து நமக்கு அருள்வார். கோயிலுக்கு செல்லும்போது உடன் பிறந்தவர்கள், பெற்றோரோடு செல்லவேண்டும். திருமணம் செய்து கொடுத்த பெண் பிள்ளைகள் கணவர் வீட்டு சாஸ்தா கோயிலுக்குத்தான் பாத்தியப்பட்டவர்களாவர்கள்.

ஆண் பிள்ளைகள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தாய், தந்தையினரோடுதான் செல்ல வேண்டும். மாமியார், மருமகள் உறவு சரியில்லை என்பதற்காக பெற்றோரை விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு தாய், தந்தை மற்றும் பங்காளிகளை விட்டு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் அதை தெய்வம் ஏற்காது. எந்த பலனும் கிடைக்காது. இதுதான் குல தெய்வ வழிபாட்டில் முக்கியமான ஒன்று. தேங்காய், பழம் கொண்ட அர்ச்சனைகளை மட்டும் குலதெய்வம் விரும்புவது இல்லை.

காலையில் அந்தணரைக்கொண்டு கணபதி ஹோமம், அடுத்து மூலவர் முதல் பரிவார தெய்வங்களுக்கு நீர், எண்ணெய், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட அனைத்து அபிஷேகமும் செய்து (மண் சிலைகளாக இருந்தால் வேண்டாம்) அதன் பின்பு மூலவர் சாஸ்தா மற்றும் பூதத்தார், சிவணினைந்த பெருமாள், தம்பிரான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சைவமும், மாடன், அம்மன் ஆகியோருக்கு அசைவமும் படைத்து, பல வகை மலர்மாலைகள் அலங்கரித்து, சாம்பிராணி வாசம் மிகுதியாக பூஜை நடைபெற வேண்டும். இவற்றையெல்லாம் விட கண்டிப்பாக கோயிலில் அடுப்பு கூட்டி சமையல் செய்து, அங்கே பந்தி பரிமாறி உணவு அருந்த வேண்டும். அதுவே குலதெய்வ வழிபாட்டில் பிரதானமானதாகும்.

மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள். ‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும்; நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது. அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குல தெய்வ கோயில் இருக்கும். எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். நகர்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு பவுர்ணமி தோறும் இதை செய்து வந்தால் பவுர்ணமி போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

குலதெய்வப் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஒருவருக்கு குலதெய்வம் இசக்கியம்மன் என்று வைத்துக் கொள்வோம் அது ஊருக்குள்ளேயே இருக்கும். அவர் அங்கு செல்ல முடியவில்லை என்பதற்கு இசக்கியம்மனும் சக்தியின் அவதாரம் தான் என எண்ணி, அருகிலிருக்கும் காளிகாம்பாள் கோயிலில் சென்று தனது நேர்த்திக் கடனை செலுத்தினால் அது குலதெய்வத்தை போய் சேராது.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Apr-17, 8:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 283

சிறந்த கட்டுரைகள்

மேலே