அம்மாவைப் பெற்றாள்

அம்மாவைப் பெற்றாள்...
-----------------------------------------
கண்கள் வரைந்து
பஞ்சுப் பொதிக்கு
கைகள் கால்கள்
பொருத்திப் பார்த்தாள்

தாள்கள் கசக்கிச்
சாயம் பூசித்
தலைக்குப் பூவாய்த்
தைத்துப் பார்த்தாள்

பவுடர் மையும்
தோளில் பையும்
பக்குவமாகச்
சேர்த்துப் பார்த்தாள்

கொடியில் காய்ந்த
துவட்டும் துண்டை
முந்தானையென
மூடிப் பார்த்தாள்

மேலே சாய்ந்தாள்
அணைத்துப் பார்த்தாள்
முத்தம் தந்தாள்
வயிற்றில் கிடந்தாள்

காலையில் பிறிந்த
தாய்மடிச்சூட்டை
கருக்கல் வரையிலும்
செய்து கிடந்தாள்...

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (13-Apr-17, 12:46 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 840

மேலே