சின்ன சின்ன நிராசைகள்

சின்ன சின்ன நிராசைகள்
குயிலினைச் சொந்தக் கூடமர்த்தி
சுரங்கள் கற்றிட ஓர் ஆசை! . . . .

கடலுக்கடியே குடிலமைத்து
கோலம் போட்டிட ஓர் ஆசை!. . . .

நீரைப்பருகும் சூரியனின்
காட்சியைக் கண்டிட ஓர் ஆசை!. . . .

சொட்டும் துளிகளை எண்ணிவைத்து
மழையிடம் சொல்லிட ஓர் ஆசை!. . .

பட்டுப் பூச்சியின் மடிதன்னில்
படுத்து உறங்கிட ஓர் ஆசை!. . . .

காற்றதன் முதுகில் சிறகாகி
கண்டம் தாவிடும் ஓர் ஆசை!. . .

கானல் நீரை வடிகட்டி
காய்ச்சிக் குடித்திட ஓர் ஆசை! . . .

மின்மினி பூச்சிதன் வெளிச்சத்தில்
கவிதை புனைந்திட ஓர் ஆசை!. . .

நிலாச் சோற்றின் பொட்டலத்தை
நிலவில் தின்றிட ஓர் ஆசை!. . . .

சிதறிய விண்மீன் மடியள்ளி
சேர்த்து முடித்திட ஓர் ஆசை!. . . .

உடலைப்பிரியும் உயிர்தன்னை
ஓடிப்பிடித்திட ஓர் ஆசை!. . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (23-Apr-17, 6:47 pm)
பார்வை : 101

மேலே