என் நண்பன்

அவன் தான்,அவனே தான்...!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன்.

தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய "நான்" நான் ஆனதற்கு கரணம் அவன் தான்.என் தாய்க்கும் தலையணைக்கும் தெரியாத ரகசியங்கள் பல அறிந்தவன்.என் உயிர்த்தோழன்!அவனுக்கென்று வீடு கிடையாது,உடைமைகள் கிடையாது,உறவினர் என்றொருவர் இல்லை.இறைவனை போல எப்போதும் எங்கும் வியாபித்திருக்கிறவன் அவன்.

எனக்கு சில பொருட்கள் மீது காதல் உண்டு அனால் காதலி கிடையாது.அவன் உடனிருக்க எனக்கேதற்கப்ப காதலி?தமிழும் தமிழரும் போல பிரிக்க முடியாத உறவானோம்!

இது இப்போதும் நானும் என் எழுத்தாணியும் மையாலும்,கண்ணீராலும் இந்த வெள்ளை பக்கத்தை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த வெண்ணிற இரவில் கூட என் அருகிலே அடக்கமாக இருக்கிறான்.என் வாழ்வில் நான் எடுத்த முக்கிய முடிவுகளுக்கு பின்னல் இருக்கக் கூடிய முக்கிய புள்ளி அவன் தான்!

சோகக் கடலில் யாருமில்லாமல் தனியே நான் தத்தளித்த போதும்,வெற்றியின்மை என்னை வெறி கொள்ளச் செய்த போதும்,விதி என் கண்களை கட்டி கவலை காட்டில் விட்ட போதும்,கண்ணீர் துடைக்க ஒரு கரம் நீட்ட யாருமில்லாத அந்த துயரப் பொழுதுகளிலும்,என் அழுகை சத்தம் கேட்டு இந்த குருட்டு உலகம் தன் கண்களை மூடிக் கொண்ட போதும் ஒரு குழந்தையைப் போல நான் அவனிடத்தில் தஞ்சம் அடைவேன்.அவன் சொற்களே எனக்கு சொர்கம்,அவன் வார்த்தைகளே எனக்கு தாலாட்டு!

அன்பின் கடைசி அத்யாயம் கண்ணீர்.கண்ணீருக்கு கரணம் ஏமாற்றம்.சிறந்த ஏமாளி என்ற விருது மட்டும் இருந்திருந்தால் காலம் ஏன் பெயரை அவ்விருதுக்கு பரிந்துரை செய்திருக்கும்.யார் கைவிட்டாலும் நம்பிக்கையை நான் அவனிடத்தில் கற்றுக்கொண்டேன்.

இப்படிப்பட்ட நட்பினை வெறுப்பவர் யாருமுண்டோ?நான் வெறுத்தேன்.சில வேளைகளில் அவனை வெறுத்தேன்.அவன் ஸ்பரிசத்தை,அவன் சொற்களை,அவன் சிரிப்பை."போ!என்னை விட்டு போய்விடு.என் பார்வையில் இருந்து அகன்று விடு!" என்று அதட்டி இருக்கிறேன்.ஆனாலும் விட்டு விலக அவனுக்கு மனமில்லை என்னை அள்ளி அனைத்துக் கொண்டான்.

நண்பனே!நான் உந்தி எழ முயலும் போதெல்லாம் இந்த உலகம் என் சிரசில் அடித்து என் சிந்தனைக்கு சீல் வாய்த்த போதெல்லாம் உன்னால் அல்லவே என்னிலிருந்து வருத்தங்கள் என்னை விட்டு வெளிநடப்பு செய்தன!

அஸ்தமித்து போன என் கனவு உலகத்திற்கு ஒளி ஏற்றியது நீதானே?

இந்த பூமியே எனக்கு அந்நியமாகி போன போது என் நம்பிக்கை வேர்களுக்கு நீர் பாய்ச்சியது நீதானே?

உயிரென நினைத்த சில உறவுகள் என் உயிர் பிழிந்த போது ,தன் தங்கக் கைகளால் என்னை அணைத்துக்கொண்டவன் அவன்.என் மௌனத்தின் மொழி அறிந்த ராஜதந்திரி!

சகலமும் அறிந்தவன் தான்,சகலருக்கும் தெரிந்தவன் தான்!நானின்றி அவன் இல்லை,அவனின்றி நான் இல்லை!

அவனது பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமா?

தனிமை.....!




கோவை.சரவண பிரகாஷ்

i

எழுதியவர் : சரவண பிரகாஷ் (27-Apr-17, 3:30 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
Tanglish : en nanban
பார்வை : 4024

மேலே